
4 மணி நேர போராட்டம்
லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி கடந்த ஆக.12ம் தேதி தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் எடுத்து. இந்தியா தரப்பில் லோகேஷ் ராகுல் 129 ரன்களும், ரோஹித் ஷர்மா 83 ரன்களும் எடுத்தனர். பிறகு, இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 391 ரன்கள் எடுத்து, இந்தியாவை விட 27 ரன்கள் முன்னிலைப் பெற்றது. கேப்டன் ஜோ ரூட், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 180 ரன்கள் குவித்தார். ஆனால், இரண்டாம் இன்னிங்ஸில் இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. எனினும், புஜாராவும், ரஹானேவும் நான்காம் நாள் ஆட்டத்தில் சிறப்பாக கைக் கொடுத்தனர். 206 பந்துகளை சந்தித்த புஜாரா 45 ரன்களும், 146 பந்துகளை சந்தித்த ரஹானே 61 ரன்களும் எடுத்தனர். இருவரும் சேர்ந்து கிட்டத்தட்ட 4 மணி விளையாடினர். எனினும், அவர்களால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியவில்லை. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ரிஷப் பண்ட் மற்றும் இஷாந்த் ஷர்மா களத்தில் இருந்தனர்.

இந்தியா தாக்குதல்
பிறகு நேற்று முன்தினம் (ஆக.16) கடைசி நாள் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் மற்றும் இஷாந்த் ஷர்மா விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்த போதும், முகமது ஷமி - பும்ரா ஜோடி நம்ப முடியாத வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 9வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 89 ரன்கள் குவித்து புது சாதனை படைத்தது. முகமது ஷமி 56 ரன்களும், பும்ரா 34 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷமி மற்றும் பும்ராவின் அதிகபட்ச ஸ்கோர் இதுவேயாகும். ரிஷப் பண்ட் அவுட்டான உடனேயே, இந்தியாவின் கதை முடிந்தது என்றே அனைவரும் கருதினர். ஆனால், 9வது விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்து, இந்திய அணி இரண்டாம் இன்னிங்ஸில் 298 ரன்கள் குவிக்க இருவரும் காரணமாக அமைந்தனர். அந்த பிறகு களமிறங்கிய இங்கிலாந்து, 120 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 151 ரன்கள் வித்தியாசத்தில் அதகளமான வெற்றியை பதிவு செய்து, தொடரில் 1 - 0 முன்னிலை பெற்றது.

ஆட்டத்தின் போக்கே மாறியது
ஷமி - பும்ரா பார்ட்னர்ஷிப்புக்கு முக்கிய காரணம், ஒரேயொரு தீப்பொறி தான். ஆம்! பும்ராவை கார்னர் செய்து இங்கிலாந்து வீரர்கள் அட்டாக் செய்தனர். வாக்குவாதங்களில் ஈடுபட்டனர். பவுன்சர்களை போட்டு தாக்கினர். அவர்கள் இப்படி பும்ராவை கட்டம் கட்டியதற்கு முக்கிய காரணம், இங்கிலாந்து பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, ஜேம்ஸ் ஆண்டர்சனை குறி வைத்து ஒரு ஓவர் முழுக்க பவுன்ஸ் பந்துகளாக வீசினார். இதில், ஆண்டர்சனுக்கு தோள்பட்டை, நெஞ்சுப் பகுதி ஆங்காங்கே அடியும் பட்டது. இதனால், கடுப்பான ஆண்டர்சன், களத்திலேயே பும்ராவை நோக்கி சரமாரியாக வார்த்தைகளை அள்ளி வீசினார். பதிலுக்கு இந்திய கேப்டன் விராட் கோலியும் வார்த்தைகளை வீசினார். இந்த மோதல், இந்திய அணி 2ம் இன்னிங்ஸில் பேட்டிங் செய்யயத் தொடங்கியதில் இருந்து மீண்டும் நீடித்தது. கோலி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, ஆண்டர்சன் நக்கலாக சில வார்த்தைகளை விட, சூடான கோலி, "பும்ராவை போன்று என்னையும் திட்டலாம் என்று பார்க்கிறீர்களா?.. இது ஒன்னும் உன் வீட்டின் கொல்லைப் புறம் கிடையாது, ஜாலியாக இருக்க" என்று பதிலடி கொடுத்தார். அதன் பிறகு, பும்ரா களமிறங்கிய போது, இங்கிலாந்து ரொம்பவே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஒரு பேட்ஸ்மேனுக்கு ஃபீல்ட் செட் செய்வதை விட, பும்ராவுக்கு கடுமையான ஃபீல்ட் செட் செய்தனர். பவுன்சர் பந்துகளை தொடர்ந்து வீசினர். விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் தொடர்ந்து ஸ்லெட்ஜிங் செய்து கொண்டே இருந்தார். பிறகு, மார்க் வுட் வீசிய பந்து, பும்ராவின் ஹெல்மெட்டை மிக பலமாக தாக்கியது. இந்த பந்து ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.

பேக் ஃபயர்
பலமாக தாக்கிய அந்த பந்து காரணமாக, பும்ரா ஒரு நொடி சற்றே பொறி கலங்கிப் போனார். இந்த சம்பவத்துக்கு பிறகு ஆட்டம் அப்படியே திசை மாறியது. பும்ராவும் - ஷமியும் மிக நேர்த்தியாக விளையாடினார்கள். 9வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 89 ரன்கள் குவித்து புது வரலாறு படைத்தது. முகமது ஷமி 56 ரன்களும், பும்ரா 34 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். ஒருக்கட்டத்தில் இந்தியா ஆல் அவுட் ஆகிவிடும் என்று அனைவரும் எண்ணிய நிலையில், 'இந்த ஸ்கோர் போதும்' என இந்தியா டிக்ளேர் செய்யும் அளவுக்கு இருவரும் அட்டகாசமாக பேட்டிங் செய்து இங்கிலாந்து பவுலர்களை தண்ணீர் குடிக்க வைத்தனர். இங்கிலாந்து வைக்க நினைக்க பொறியில் அவர்களே சிக்கி போட்டியை இழந்தனர்.

திருப்பிக் கொடுத்தோம்
இந்த நிலையில், இங்கிலாந்து பயிற்சியாளர் க்றிஸ் சில்வர்வூட், லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி குறித்து சில அதிரடியான கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில், "அந்த சாதாரண சண்டையை நினைத்து நாங்கள் பயப்படவில்லை. அவர்கள் எங்களை சீண்டினார்கள். நாங்கள் திருப்பிக் கொடுக்க நினைத்தோம். அவ்வளவுதான். என்னை பொறுத்தவரை இந்த மோதல், ஒரு மிகச் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை உருவாக்கிவிட்டது. எனினும், போட்டி முடிவை பொறுத்தவரை நாங்கள் ஏமாற்றமடைகிறோம், ஆனால் இது என்ன அட்டகாசமான டெஸ்ட் போட்டி! போட்டியில் அனல் பறந்தது. தங்கள் நாட்டுக்காக விளையாடும் இரண்டு அணிகளும் அந்த போட்டியை நினைத்து பெருமை பட்டுக்கொள்ளலாம். அந்த போட்டியை நான் ரசித்து அனுபவித்தேன்.

பாடம் கற்றோம்
இந்த போட்டியில் உணர்ச்சிகள் அதிகமாக இருந்தன, அதில் எந்த சந்தேகமும் இல்லை. வெளிப்படையாக, முதல் இன்னிங்சில் இந்திய வீரர்கள் ஆண்டர்சனை குறிவைத்தனர். அதனால், நாங்கள் அவர்களிடமும் கடுமையாக எதிர்வினையாற்றினோம். அவர்கள் கொடுப்பதை உடனுக்குடன் திருப்பிக் கொடுக்க முயன்றோம். இனிமேலும் முயற்சிப்போம். ஆனால், இந்திய அணியின் லோயர் சிறப்பாக விளையாடினார். அது போட்டியை எங்களிடம் இருந்து வெகுதூரம் எடுத்துச் சென்றுவிட்டது. இருப்பினும், இதிலிருந்தும் நாங்கள் பாடம் கற்றுக்கொள்வோம்" என்றார்.

கம்பேக்
இறுதியில், வரும் ஆக.25ம் தேதி ஹெட்டிங்லேவில் தொடங்கவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டி குறித்து பேசிய இங்கிலாந்து பயிற்சியாளர், "நான் இங்கிலாந்து அணிக்கு சொல்ல விரும்புவது, அவர்கள் தங்கள் ஆர்வத்தை இழந்துவிடக் கூடாது. வெற்றிப் பெற வேண்டும் என்ற நமது ஆர்வத்தை நாம் பாஸிட்டிவாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆர்வம் தான் உங்களுக்கு ஆற்றலைத் தருகிறது, அது உங்களுக்கு எரிபொருளைத் தருகிறது என்று நான் கூறுவேன். நல்ல விஷயம் என்னவென்றால், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு இன்னும் சிறிது கால நேரம் இருக்கிறது. அதனால் வீரர்கள் அவர்கள் வீட்டிற்குச் சென்று, தங்கள் குடும்பத்தினருடன் சிறிது நேரம் செலவழிக்கலாம், கொஞ்சம் மன அமைதியடையலாம், மனதைத் தெளிவுபடுத்தி, ஃப்ரெஷ்ஷாக திரும்பலாம்" என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











