பெங்களூரு : பிரபல இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் கர்நாடகா அணிக்காக பந்து வீசிய சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கிலாந்து வீரர்களான ஜோப்ரா ஆர்ச்சர் ஏன் கர்நாடக அணிக்காக விளையாடுகிறார் என்ற குழப்பம் ரசிகர்களின் மத்தியில் எழுந்துள்ளது.
ஜோப்ரா ஆச்சரை பெருந்தொகை கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. ஆனால் அவர் காயம் காரணமாக பெரிய அளவில் விளையாடவில்லை. இந்த நிலையில் கடந்த சீசனில் மும்பை அணிக்காக விளையாட ஜோப்ரா ஆர்ச்சர் மீண்டும் காயம் காரணமாக பாதியிலே வெளியேறினார்.

தொடர்ந்து காயம் ஏற்பட்டு இருப்பதால் ஜோப்ரா ஆர்ச்சர், வரும் ஐபிஎல் தொடரில் பங்கு பெறவில்லை. இந்த நிலையில் ஜோப்ரா ஆர்ச்சரை டி20 உலக கோப்பை தொடரில் விளையாட வைக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு எடுத்து இருக்கிறது. இதனால் ஜோப்ரா ஆர்ச்சருக்கு உடல் தகுதியை மேம்படுத்தும் விதமாக பல்வேறு பணிகள் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் ஜோப்ரா ஆர்ச்சர், கவுண்டி அணியான சஸ்சக்ஸ் அணி உடன் பத்து நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். இங்கு இந்திய அணிகளுடன் விளையாடி பயிற்சி பெறும் விதமாக இந்த தொடர் நடத்தப்படுகிறது. கர்நாடகா அணியுடன் பெங்களூருவில் சஸ்சக்ஸ் அணி மோதியது.
அப்போது டாஸ் வென்ற சஸ்சக்ஸ் அணி முதலில் பந்து வீசியது. அப்போது ஜோப்ரா ஆர்ச்சர், சஸ்சக்ஸ் அணிக்காக பந்து வீசவில்லை. இதை அடுத்து கர்நாடகா அணி இன்று பந்து வீசியபோது திடீரென்று ஜோப்ரா ஆர்ச்சர் தாம் கர்நாடகா அணியின் சப்ஸ்டியூட்டாக சேருகிறேன் என்று கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். இதனை அடுத்து கர்நாடகா அணியும் ஜோப்ரா ஆர்ச்சரை மாற்றுவீரராக சேர்த்துக் கொண்டு இன்று களமிறங்கி இருக்கிறது.
இந்த நிலையில் சஸ்சக்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ஜோப்ரா ஆர்ச்சர் தன் வழக்கமான வேகத்தில் பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த நிலையில் கர்நாடகா அணிக்காக ஜோப்ரா ஆர்ச்சர் விளையாடியதால் அவர் ஆர்சிபி அணிக்கு வரப்போகிறார் என்று வதந்தி பரவியது. ஆனால் அதில் உண்மை இல்லை. ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு பதில் இதுபோன்ற பயிற்சி முகாம்களிலும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விளையாட வைக்க ஜோப்ரா ஆர்ச்சர், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.