டெல்லி: உலகக் கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட்டின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
நியூசிலாந்து -இங்கிலாந்து அணிகள் மோதிய முதலாவது அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த நியூசிலாந்து அணிக்கு கேப்டன் வில்லியம்சனும், மார்ட்டின் கப்டில் தொடக்கம் தந்தனர். அதிரடியாக ஆடிய கப்டில் 12 பந்துகளைச் சந்தித்து 15 ரன்களில் வெளியேறினார்.

பின்னர் கேப்டன் வில்லியம்சனுடன் இணைந்தார் காலின் முன்ரோ. இந்த ஜோடி சிறிது நேரம் நிலைத்து ஆடியது. அணியின் ஸ்கோர் 91 ஆக இருந்த போது வில்லியம்சன் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். முன்ரோ 47 ரன்கள் எடுத்திருந்த போது பிளாங்கெட் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். ஆல் ரவுண்டர் கோரி ஆண்டர்சன் 23 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஸ்டோக்ஸ் பந்தில் வீழ்ந்தார்.
இதன் பின்னர் களமிறங்கிய ராஸ் டெய்லர், எலியட், ரோன்ச், மிட்செல் சான்ட்னெர், மிட்செல் மெக்லேனகன் ஆகியோரால் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டை பறிகொடுத்து நடையைக் கட்டினர். இதனால் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நியூசிலாந்தை தொடர்ந்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆட்டத்தைத் தொடங்கியது இங்கிலாந்து. அந்த அணியின் தொடக்கவீரர்கள் ஜேசன் ராய் மற்றும் ஹேல்ஸ், ஆரம்பம் முதலே அடித்து நொறுக்கினர். அதிலும் குறிப்பாக ராய், முதல் ஓவரிலேயே 4 பவுண்டரிகளை விளாசினார். முதல் 5 ஓவரில் இங்கிலாந்து அணி 60 ரன்களை குவித்தது.
ஹேல்ஸ் 20 ரன்களில் வெளியேறினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8.2 ஓவர்களில் 82 ரன்களை சேர்த்தது. 10.2 ஓவர்களில் இங்கிலாந்து அணி 100 ரன்ககளை கடந்தது. இதனிடையே இங்கிலாந்து வீரர் சோடியின் பந்தை அடித்து ஆட முயன்ற ராய் கிளின் போல்டானார். அவர் 44 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் இரு சிக்ஸர்கள் உள்பட 78 ரன்கள் குவித்தார். அடுத்து உள்ள வந்த மோர்கன் தான் சந்தித்த, சோடியின் முதல் பந்திலேயே எல்.பி.டபிள்யூ ஆனார்.
முதல் 11 ஓவர்களில் 103 ரன்களை குவித்த இங்கிலாந்து, அடுத்த மூன்று ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே எடுத்ததோடு இரண்டு முக்கியமான விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து இங்கிலாந்து வீரர்கள் நிதானமாக விளையாடத் தொடங்கினர்.
கடைசியில் ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடினார். அவர் 17 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார். இதில் 3 சிக்ஸர்களும், 2 பவுண்டரிகளும் அடங்கும். இறுதியில் இங்கிலாந்து அணி 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டித் தொடரின் லீக் ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த நியூசிலாந்து அணி அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது. 78 ரன்கள் குவித்த ஜேசன் ராய் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.