
வெற்றிக்கு பிறகு தோல்வி
நாட்டிங்கமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், ஏறக்குறை வெற்றிக்கு அருகில் சென்றுவிட்ட இந்திய அணி, கடைசி நாளில் பெய்த மழை காரணமாக வெற்றிப் பெறும் வாய்ப்பை இழந்தது. ஆனால், லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி,151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதன் பிறகு, ஹெட்டிங்லேவில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியை முதல் இன்னிங்ஸில் 78 ரன்களுக்கு சுருட்டியது இங்கிலாந்து. அதன் பிறகு எவ்வளவோ போராடியும், இந்திய அணியால் மீண்டு வர முடியவில்லை. முடிவில், இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த சூழலில் தான் நான்காவது டெஸ்ட் போட்டி நாளை (செப்.2) லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் நிச்சயம் 2 மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நம்பிக்கை வைக்கும் கோலி
தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, இந்திய அணியின் 11 வீரர்கள் கொண்ட பட்டியலில், லோகேஷ் ராகுல், ரோஹித் ஷர்மா, விராட் கோலி (c) , புஜாரா, அஜின்க்யா ரஹானே (wc), ரிஷப் பண்ட் (wk), ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், பும்ரா ஆகிய வீரர்கள் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், புஜாரா மற்றும் ரஹானே ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுவது உறுதியாகியுள்ளது. இருவருமே, இந்த டெஸ்ட் தொடரில், தொடர்ந்து சொதப்பி வந்தனர். எனினும், லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் கடுமையாக போராடி 45 ரன்கள் அடித்த புஜாரா, மூன்றாவது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் 91 ரன்கள் அடித்து நம்பிக்கை அளித்தார். கேப்டன் கோலியும் இருவர் மீதும் பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதால், மீண்டும் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்றே தெரிகிறது.

அஷ்வினுக்கு வாய்ப்பு
அதேசமயம், மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஃபீல்டிங்கின் போது, ஜடேஜாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால், அவர் நான்காவது போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதில் ரவிச்சந்திரன் அஷ்வின் அணியில் இணைகிறார். உண்மையில், ஜடேஜா இந்த போட்டியில் விளையாடுவதாக இருந்தாலும் அஷ்வினும் நிச்சயம் இடம் பிடித்திருப்பார். ஏனெனில், லண்டன் ஓவல் பிட்சை பொறுத்தவரை, வீரர்கள் விளையாட விளையாட பிட்ச் ஸ்லோ தன்மைக்கு மாறிவிடும். ஆகையால், கடைசி 2 நாட்களில் நிச்சயம் ஸ்பின்னர்களுக்கு பிட்ச் கைக்கொடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜடேஜா இருந்திருந்தாலும் அஷ்வினுக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால், ஜடேஜா ஏன் அணியில் இருக்க வேண்டும்? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

துணை கேப்டன்
ஏனெனில், மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் அவர் பேட்டிங்கில் ஓரளவுக்கு விளையாடினார். ஒரு அரைசதம் கூட அடித்தார். ஆனால், பந்துவீச்சில் அவரால் சுத்தமாக தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை. ஒரு விக்கெட் கைப்பற்றுவதற்குள்ளயே நாக்கு தள்ளிவிட்டார். இதனால், அணிக்கு அவர் சுமையாக இருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றியது. எனினும், நான்காவது டெஸ்டில் ஸ்பின் கைக்கொடுக்கும் என்பதால், அவருக்கு நிச்சயம் அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காயம் அவரை ஆட்கொண்டுவிட்டது. இந்நிலையில், இங்கிலாந்து அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள மொயீன் அலி ஜடேஜா குறித்து பேசியுள்ளார்.

மொயீன் அலி நியமனம்
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ஜோஸ் பட்லர், தனது மனைவிக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவுள்ளதால், நான்காவது போட்டியில் இருந்து வெளியேறி இருக்கிறார். ஐந்தாவது போட்டியிலும் அவர் விளையாடுவாரா என்பது சந்தேகமே. ஏனெனில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், "நானும், எனது குடும்பமும் கிரிக்கெட்டுக்காக நிறைய இழந்துவிட்டோம்" என்று வெளிப்படையாகவே கூறியிருந்தார். இதனால், கடைசி டெஸ்ட் போட்டியில் பட்லர் விளையாடுவது சந்தேகமே. இந்நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக ஸ்பின் ஆல் ரவுண்டர் மொயீன் அலி நியமிக்கப்பட்டுள்ளார்.

நிறையே பேசுகிறேன்
புதிய பதவிக்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மொயீன் அலி, "எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இங்கிலாந்து அணியின் கேப்டன் அல்லது துணை கேப்டன் பதவி என்பது எந்த வடிவ கிரிக்கெட்டாக இருந்தாலும் அது பெரியது. நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இதுதான் விளையாட்டின் அழகு. நான் இல்லையென்றால் ஜோஸ் துணை கேப்டனாக இருந்திருப்பார். விஷயங்கள் விரைவாக மாறலாம், ஆனால் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்ய வேண்டும். நான் வீரர்களிடம் நிறைய பேசுகிறேன். நாங்கள் ஒருவருக்கொருவர் யோசனைகளை பரிமாறிக் கொள்கிறோம்.

எப்போதும் இடமுண்டு
இங்கிலாந்தில் உள்ள பெரும்பாலான மைதானங்களில் எப்படியும் பந்துகள் சற்று சுழலும். சில பிட்ச்களில் டர்ன் அதிகமாக இருக்கும். ஆனால், எப்படியும் எல்லா பிட்சுகளிலும் ஓரளவுக்கு டர்ன் இருக்கும். அஷ்வின் நாளைய போட்டியில் நிச்சயம் விளையாடுவார் என்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை ஜடேஜா ஒரு அற்புதமான கிரிக்கெட் வீரர் என்று நான் உணர்கிறேன். உலகில் எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்களில் அவரும் ஒருவர். எப்படிப்பட்ட பிட்சாக இருந்தாலும், எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும், நான் எப்போதும் ஜடேஜாவை என் அணியில் வைத்திருப்பேன்" என்று கூறியுள்ளார். நாளை தொடங்கவிருக்கும் நான்காவது டெஸ்ட் போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்குகிறது. 3 மணிக்கு டாஸ் போடப்படும். இந்த போட்டியில் மட்டும் இந்தியா வென்றுவிட்டால், எப்படியும் டெஸ்ட் தொடரை வென்றுவிடலாம். அப்படி வென்றால், 2007ம் ஆண்டுக்கு பிறகு.. அதாவது டிராவிட் கேப்டன்ஷிப்புக்கு பிறகு, இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்லும் முதல் கேப்டன் எனும் பெருமையை விராட் கோலி பெறுவார்.


Click it and Unblock the Notifications











