லண்டன்: இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் 98 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸி. அணியின் ஹேசல்வுட் விரித்த ஷார்ட் பால் வலையில் டக்கெட் வீழ்ந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடக்கும் ஆஷஸ் தொடரில் சதம் அடிக்க வேண்டும் என்ற கனவுடனே இருநாட்டு கிரிக்கெட் வீரர்களும் சிறு வயது முதலே வளர்வார்கள். இன்னும் சொல்லப் போனால் ஆஷஸ் தொடரில் வெல்வதற்காக மட்டுமே, மற்ற அணிகளுடன் டெஸ்ட் கிரிக்கெட்டை பயிற்சிப் போட்டியாக ஆடுகிறோம் என்றும் இரு நாட்டு ரசிகர்களும் பெருமிதம் கொள்வார்கள்.

அந்த அளவிற்கு ஆஷஸ் தொடருக்கும், ஆஷஸ் தொடரில் விளாசும் சதத்திற்கும் மதிப்பு கொடுக்கப்படும். அப்படியான சதம் அடிக்கும் வாய்ப்பை இங்கிலாந்து அணியின் பென் டக்கெட் தவறவிட்டுள்ளார். இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 416 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. சிறப்பாக ஆடிய ஸ்டீவ் ஸ்மித் 110 ரன்களை சேர்த்தார்.
இதையடுத்து இங்கிலாந்து அணி தரப்பில் கிராலே - பென் டக்கெட் தொடக்கம் கொடுத்தனர். வழக்கம் போல் பேஸ் பால் திட்டத்தின்படி இருவரும் அதிரடியாக ரன்கள் சேர்த்தனர். இவர்களை பிரிக்க முடியாமல் ஆஸி. பந்துவீச்சாளர்கள் திணறினர். ஒரு கட்டத்தில் வேகப்பந்துவீச்சாளர்களை விடுத்து, நேதன் லயனை அட்டாக்கில் கொண்டு வந்தார் கம்மின்ஸ். அதற்கு சரியான பலன் கிடைத்தது. சிறப்பாக ஆடிய கிராலே 48 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஆனால் பென் டக்கெட் தேவைக்கேற்ப அதிரடியாக விளையாடி வந்தார். அரைசதம் கடந்து அதிரடியாக ஆடிய டக்கெட் ஆஸி. பந்துவீச்சாளர்களை அசாத்தியமாக எதிர்கொண்டார். ஒரு கட்டத்தில் அவருக்கு ஷார்ட் பால் பிரச்சனை இருப்பதை அறிந்துகொண்ட ஆஸி. வீரர்கள் தொடர்ந்து ஷார்ட் பால்களை வீசி அட்டாக் செய்தனர். இருப்பினும் 90 ரன்களை கடந்து சதத்தை நெருங்கியதால் இங்கிலாந்து ரசிகர்களின் ஆரவாரம் உச்சத்தை எட்டியது.
98 ரன்கள் அடித்திருந்த நிலையில், ஹேசல்வுட் வீசிய ஷார்ட் பால் வார்னரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சதத்தை 2 ரன்களில் தவறவிட்டதால் பென் டக்கெட் சோகத்துடன் பெவிலியன் திரும்பினார். இதனால் இங்கிலாந்து ரசிகர்களின் ஆரவாரமும் மொத்தமாக அமைதியானது. இருப்பினும் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் சேர்த்து அதிரடியாக ஆடி வருகிறது. இதனால் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 300 ரன்களை எட்ட வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.