நாட்டிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்துள்ளது. கோஹ்லி 4 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் டெஸ்டில் 31 ரன்களிலும், இரண்டாவது டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்களிலும் இங்கிலாந்து வென்றது.

இரண்டு டெஸ்ட்களிலும் பேட்டிங்கில் சொதப்பியதே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாகும். இந்திய அணியின் பேட்டிங் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் துவங்கியுள்ளது. இதில் வென்றால், தொடரை வெல்லலாம் என்ற நிலையில் இங்கிலாந்து உள்ளது. அதே நேரத்தில் தோல்வியை தவிர்ப்பதுடன், தொடரை இழப்பதை தடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்தியா பேட்டிங் செய்ய உல்ளது.
இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் பதிலாக 20 வயதாகும் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக அறிமுகமாகிறார். இந்தியாவின் சார்பில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும் 291வது வீரராகிறார் ரிஷப் பந்த்.
ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் திரும்பியுள்ளார். அதனால், குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. அதேபோல் துவக்க ஆட்டக்காரராக முரளி விஜய்க்கு பதிலாக ஷிகார் தவான் சேர்க்கப்பட்டுள்ளார்.
துவக்க ஆட்டக்காரர்கள் ஷிகார் தவான் மற்றும் லோகேஷ் ராகுல் நல்ல துவக்கத்தை தந்தனர். இருவரும் நிதானமான விளையாடிக் கொண்டிருந்தனர். அணியின் ஸ்கோர் 60ஆக இருந்தபோது தவான் ஆட்டமிழந்தார். அவர் 35 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து 23 ரன்கள் எடுத்திருந்த லோகேஷ் ஆட்டமிழந்தார். சத்தேஸ்வர் புஜாரா 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
முதல் நாள் உணவு இடைவேளையின்போது இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் விராட் கோஹ்லி 4 ரன்களுடன் களத்தில் உள்ளார். இங்கிலாந்தின் கிறிஸ் வோல்க்ஸ் மூன்று விக்கெட்களையும் வீழ்த்தினார்.