விசாகபட்டினம் டெஸ்ட்: 2வது இன்னிங்சில் இந்தியா 298 ரன்கள் முன்னிலை! கோஹ்லி மீண்டும் கலக்கல்
விசாகபட்டினம்: 3வது நாள் ஆட்ட நேர இறுதியில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து, இங்கிலாந்தைவிட 298 ரன்கள் முன்னிலை பெற்று வலுவாக உள்ளது. கேப்டன் கோஹ்லி அரை சதம் கடந்து விளையாடி வருகிறார். இவர் முதல் இன்னிங்சில் சதம் விளாசியிருந்தார்.
இங்கிலாந்துக்கு எதிராக விசாகபட்டினத்தில் தொடங்கிய, 2வது டெஸ்ட் போட்டியில், இந்தியா தனது முதல் இன்னிங்சில் 455 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்று, பென்ஸ்டோக்ஸ் மற்றும் விக்கெட் கீப்பர் பெய்ர்ஸ்டோ ஆகியோர் பேட்டிங்கை தொடர்ந்தனர்.
இந்த ஜோடி நங்கூரமிட்டு ஆடியது. ஆனால் 53 ரன்களில் பெய்ர்ஸ்டோவை உமேஷ் யாதவ் பௌல்ட் ஆக்கியதன் மூலம், பார்ட்னர்ஷிப்பை உடைத்தார். இதையடுத்து அஸ்வினிடம் எல்பிடபிள்யூ முறையில் பென் ஸ்டோக்ஸ் அவுட்டானார். அவர் எடுத்த 70 ரன்கள்தான் இப்போட்டியில், இங்கிலாந்தின் அதிகபட்ச தனி நபர் ஸ்கோராகவும் இருந்தது.

255 ரன்களுக்கு ஆல்-அவுட்
உணவு இடைவேளை நேரத்தில் இங்கிலாந்து 255 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. ஃபாலோ ஆனை தவிர்க்க 256 ரன்கள் தேவைப்பட்டிருந்தது. இங்கிலாந்து ஃபாலோ ஆன் ஆனபோதிலும், இந்தியாவே திரும்பவும் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. சுழலுக்கு சாதகமான பிட்ச் என்பதால் இறுதி நாட்களில் இங்கிலாந்தை பேட் செய்ய வைப்பதே சிறந்தது என்பதால் கேப்டன் கோஹ்லி இம்முடிவுக்கு வந்தார்.

அஸ்வின் மீண்டும் அசத்தல்
இந்திய தரப்பில் அதிகபட்சமாக அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதற்காக அவர் 67 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார். டெஸ்ட் போட்டியில் 5 அல்லது அதற்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தியது இது 22வது முறையாகும். இங்கிலாந்துக்கு எதிராக அஸ்வின் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை சாய்த்துள்ளது சிறப்பு.

ஆரம்பத்தில் அதிர்ச்சி
இந்திய அணியும் தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். முரளி விஜய் 3, ராகுல் 10 ரன்களில் நடையை கட்ட, முதல் இன்னிங்சில் சதம் விளாசிய புஜாராவும் ஒரு ரன்னில் ஆன்டர்சன் பந்தில் பௌல்ட் ஆனார். இருப்பினும் கோஹ்லி, ரஹானே தடுப்பாட்டம் மூலம் மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டனர்.

வலுவான நிலையில் இந்தியா
ஆட்ட நேர முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்து, இங்கிலாந்தைவிட 298 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கோஹ்லி 56 ரன்களுடனும், ரஹானே 22 ரன்களுடனும் நாளைய 4வது நாள் ஆட்டத்தை தொடர உள்ளனர். கோஹ்லி முதல் இன்னிங்சில் சதம் விளாசியிருந்தார். 2வது இன்னிங்சிலும், இக்கட்டான நேரத்தில் களம் புகுந்து, கேப்டனுக்கே உரிய பொறுப்புடன் அணியை சரிவிலிருந்து மீட்டு அரை சதம் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications