சென்னை: இந்தியா-இங்கிலாந்து அணிகள் நடுவேயான 5வது மற்றும் நிறைவு டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நாளை தொடங்குகிறது. காயம் காரணமாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் விளையாடவில்லை.
ஏற்கனவே டெஸ்ட் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் வென்ற நிலையில், 5வது டெஸ்ட் நாளை தொடங்குகிறது. புயல் மற்றும் மழையால் சேதமடைந்த மைதானத்தின் பல பகுதிகளும் தற்போது சீரமைக்கப்பட்டுள்ளன. நிலக்கரி தணலை கொண்டு பிட்ச் சூடுபடுத்தப்பட்டுள்ளது.

போதிய அளவு பயிற்சி எடுக்க முடியாத சூழல் இரு அணிகளுக்குமே. இந்த நிலையில் ஆன்டர்சன் தோள் மற்றும் கால் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் இப்போட்டியில் ஆட முடியாது என இங்கிலாந்து அணி கேப்டன் குக் தெரிவித்துள்ளார்.
விராட் கோஹ்லியின் பேட்டிங் திறமையின்மையை இந்திய பிட்சுகள் சமப்படுத்திவிடுவதாக குறை கூறியவர் ஆன்டர்சன். இந்தியாவில் அவரது பந்து வீச்சு எடுபடவில்லை. எனவே இறுதி டெஸ்டிலும் மொக்கையாக பந்து வீசி அவமானப்படுவதற்கு பதிலாக ஊரைப்பார்த்து ஓடி விடலாம் என ஆன்டர்சன் கிளம்பியிருக்கலாம் என கிசுகிசுக்கப்படுகிறது.
ஆன்டர்சன் பேட்டிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளரும், அந்த அணி கண்ட திறமையான பேட்ஸ்மேன்களில் ஒருவருமான இன்சமாம் உல்-ஹக் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.