லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5 போட்டிகளில் விளையாடி 2 சதங்கள், 2 அரைசதங்கள் உட்பட 712 ரன்களை விளாசினார். சுனில் கவாஸ்கருக்கு பின் 700 ரன்களை ஒரே டெஸ்ட் தொடரில் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இந்த டெஸ்ட் தொடரின் போது யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அதிரடி ஆட்டத்திற்கு காரணமே இங்கிலாந்து அணி தான் என்று பென் டக்கெட் கூறினார். இங்கிலாந்து அணியின் பேஸ் பால் அணுகுமுறையை பின்பற்றியே ஜெய்ஸ்வால் ஆடியதாக பென் டக்கெட் கூறியது இந்திய ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை பெற்றது.

இந்த விவகாரம் குறித்து மீண்டும் பேசியுள்ள பென் டக்கெட், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு நான் பாராட்டு தான் கொடுத்திருந்தேன். நிச்சயம் அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. நான் சொன்ன விஷயங்களை யாரும் பேசவே இல்லை. அந்த டெஸ்ட் தொடர் முழுக்கவே சிறப்பாக விளையாடினார். அது தான் வியப்பை கொடுத்தது.
இங்கிலாந்து அணி பேஸ்பால் அணுகுமுறையை கையில் எடுத்ததற்கு காரணம் மெக்கல்லம் தான். அவர் எங்களிடம் வந்து, இதற்கு முன் தொடக்க வீரர்களாக விளையாடியவர்களை போலவே ஏன் நீங்களும் விளையாட வேண்டும்? உங்களின் சிறந்த திறன் எதுவோ அதற்கேற்றபடி விளையாடுங்கள் என்று கூறினார். அதுதான் எங்களுக்கு தேவையாக இருந்தது. நிச்சயம் பேஸ் பால் அணுகுமுறையிலும் சில சறுக்கல்கள் உள்ளன.
நான் அதிரடியாக விளையாட முயன்று விக்கெட்டை பறிகொடுத்துள்ளேன். ஆனால் தொடக்க வீரராக அப்படி ஆடும் போது தான் அதிகமான ரன்களை சேர்த்திருக்கிறேன். எப்போதெல்லாம் பந்துகளை விளையாடாமல் கடக்கிறேனோ, அப்போது எளிதாக எட்ஜாகி விக்கெட்டை விட்டுவிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜெய்ஸ்வால் ஆடிய ஆட்டம் ஆஸ்திரேலியா அணியின் ஓய்வறை வரைக்கும் எதிரொலித்துள்ளது. ஆஸ்திரேலியா அணியுடன் இணைந்து பயணிக்கும் பத்திரிகையாளர் பரத் சுந்தரேசன் கூறுகையில், ஜெய்ஸ்வால் ஆடிய ஆட்டத்தை பற்றி ஆஸ்திரேலியா ஓய்வறையில் பேச தொடங்கிவிட்டார்கள். பார்டர் கவாஸ்கர் டிராபியில் ஜெய்ஸ்வால் எப்படி ஆடுவார் என்பதை பார்க்க ஆவலாக இருப்பதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.