லண்டன்: லண்டன் ஸ்பிரிட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 24 பந்துகளில் அரைசதம் விளாசியுள்ள சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் இங்கிலாந்து அணியின் முன்னணி டெஸ்ட் வீரர் ஜோ ரூட் கடந்த ஆண்டு முதல்முறையாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ராஜஸ்தான் அணிக்காக களமிறங்கிய அவருக்கு, ஒரேயொரு முறை மட்டும் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. இதனால் ஜோ ரூட்டின் டி20 பேட்டிங் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அளவில் இருந்தது.

அந்த எதிர்பார்ப்பு பதிலளிக்கும் வகையில் அசத்தலான ஒரு இன்னிங்ஸ் ஹன்ரெட் லீக் தொடரில் விளையாடி இருக்கிறார். 100 பந்துகள் மட்டுமே வீசப்படும் ஹன்ரெட் லீக் போட்டியில் லண்டன் ஸ்பிரிட் - ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய லண்டன் ஸ்பிரிட் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்கள் விளாசியது. அதிகபட்சமாக லாரன்ஸ் 49 பந்துகளில் 93 ரன்கள் விளாசினார்.
இதன்பின் களமிறங்கிய ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறியது. இதன் பின் களமிறங்கிய ஜோ ரூட் பவுண்டரிகளாக விளாசி தள்ளினார். என்ன இவர் பவுண்டரியாக விளாசுகிறார், சிக்சர் அடிக்க மாட்டாரா என்ற யோசித்த நிலையில், ஸ்கூப் ஷாட் மூலமாக அபாரமான ஒரு சிக்சரை விளாசினார். இதன் மூலம் 24 பந்துகளில் ஜோ ரூட் அரைசதம் கடந்தார்.
சிறப்பாக ஆடிய அவர் 35 பந்துகளில் 10 பவுண்டரி, 2 சிக்ஸ் உட்பட 72 ரன்களை விளாசினார். இருப்பினும் அவரின் ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணி 100 பந்துகளில் 5 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் மட்டுமே எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இருப்பினும் ஜோ ரூட்டின் அதிரடி ஆட்டம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பைத் தொடருக்கு இன்னும் 52 நாட்களே உள்ள நிலையில், இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் சிறப்பாக தயாராகி வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோல் ஜோ ரூட் தன்னால் டி20 கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை நிரூபித்துள்ளதாகவும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.