டிசம்பர் 16ல் ஏலம்
அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளுக்கான எதிர்பார்ப்பு இந்த ஆண்டே பற்றிக் கொண்டுள்ளது. இதற்கான ஏலம் இம்மாதம் 16ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஏலத்திற்கு முன்பாகவே அஸ்வின் உள்ளிட்ட வீரர்களை அணியினர் தேர்வு செய்து அறிவித்துள்ளனர்.
இங்கிலாந்து வீரர்கள் பக்கம் கவனம்
ஐபிஎல் ஏலத்திற்காக அணியினர் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் எப்போதும் இல்லாத வகையில் இங்கிலாந்து வீரர்கள் பக்கம் அணியினரின் பார்வை சென்றுள்ளது. இதற்கு காரணம் அவர்கள் சமீபத்தில் விளையாடிய டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடியதுதான்.
கவனம் பெற்ற மூன்று வீரர்கள்
இங்கிலாந்தின் டாம் பேன்டன், கிறிஸ் ஜோர்டன் மற்றும் இயோன் மார்கன் ஆகிய மூன்று வீரர்கள் சமீபத்திய டி20 போட்டிகளின் மூலம் சர்வதேச கவனத்தை பெற்றுள்ளனர். அவர்கள் மூவரையும் ஏலம் எடுக்க ஐபிஎல் அணியினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
துவக்க ஆட்டக்காரராகவும் அபாரம்
விக்கெட் கீப்பர் டாம் பாண்டன் சமீபத்தில் நியூசிலாந்திற்கு எதிராக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கீப்பராக மட்டுமின்றி சிறந்த துவக்க ஆட்டக்காரராகவும் இவர் அதகளம் செய்வார் என்பதால், ஐபிஎல்லில் இவரை ஏலம் எடுக்க கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டி20 தொடரில் சிறப்பான ஆட்டம்
சமீபத்திய டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள கிறிஸ் ஜோர்டன், பேட்ஸ்மேனாகவும் பீல்டராகவும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி ஆல்ரவுண்டராகவும் உள்ளார். இதையடுத்து இவருக்கும் ஐபிஎல் ஏலத்தில் போட்டி நிலவும் என்று கூறப்படுகிறது.
கேப்டன் இயோன் மார்கன்
இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருந்து உலக கோப்பை தொடரை வழிநடத்திய இயோன் மார்கன், அபுதாபியில் சமீபத்தில் நடைபெற்ற டி10 தொடரிலும் 6 போட்டிகளில் 175 ரன்களை விளாசியுள்ளார். இதன்மூலம் இவரது ஸ்டிரைக் ரேட் 186ஆக உயர்ந்துள்ளது. கேப்டனுக்கான வேட்டை நடத்தும் ஐபிஎல் அணிக்கு இவர் சிறந்த தேர்வாக இருப்பார்.