
லார்ட்ஸில் முதல் அட்டகாசம்
இங்கிலாந்தில் பிராங்க் செயல்களில் ஈடுபடும் ஜார்வோ, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியின்போது இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து, பீல்டிங் செய்வதுபோல உள்ளே வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். வீரர்கள், அம்பயர், ரசிகர்கள் என அனைவரும் ஷாக் ஆனார்கள். ஆனால், அப்போது அவரது செயல்பாடு அனைவராலும் ரசிக்கப்பட்டது. அதன் பிறகு லார்ட்ஸ் போட்டியைத் தொடர்ந்து, ஹெட்டிங்லே மைதானத்திலும் தனது சேட்டையை அமல்படுத்தினார். இந்தமுறை பேட்ஸ்மேன் கோலியாக உருமாறி அவர் பேட்டிங் செய்ய களமிறங்கி பீதியை ஏற்படுத்தினார். கோலி களமிறங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்க, ஆஜானுபாகுவான உடலமைப்போடு கொழுக் மொழுக் என்று ஒரு உருவம் களமிறங்கியது. யார்ரா அது என்று பார்த்தால், அது ஜார்வோ. இதைப் பார்த்து நடுவர்கள் அதிர்ச்சியாக பின்னர் பாதுகாவலர்கள் வந்து அவரை வெளியே இழுத்துகொண்டு போனார்கள். ஹெல்மெட் அணிந்து, அதற்குள் ஒரு மாஸ்க்கும் அணிந்து வந்து ரகளை செய்துவிட்டார்.

வாழ்நாள் தடை
இங்கிலாந்து அணி விளையாடும் போட்டிகளுக்குள் வந்து பிராங்க் செய்வதை இவர் வாடிக்கையாக செய்து வருகிறார். இந்நிலையில், ஆட்டத்தின் போது பாதிப்பை ஏற்படுத்தும் இவரை போன்ற நபர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. இதனால், ஹெட்டிங்லே மைதானத்திற்குள் இனி வாழ்நாள் முழுவதும் நுழைவதற்கு ஜார்வோவுக்கு தடை விதித்தது. ஆனால் இந்திய அணி சார்பில் அவர் மீது எந்தவித புகாரும் அளிக்கப்படவில்லை, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்தான், தானாக முன்வந்து இந்த நடவடிக்கையை எடுத்தது. சரி.. இத்தோடு சேட்டை ஓய்ந்துவிட்டது என்று பார்த்தால், நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நுழைந்து பந்துவீச முயன்றிருக்கிறார் ஜார்வோ. இங்கிலாந்து பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, பந்துவீசுவது போல் ஓடி வந்த ஜார்வோ பேர்ஸ்டோ மீது வேகமாக மோதிவிட அவர் பதறிவிட்டார். அதன் பிறகு வழக்கம் போல், பாதுகாவலர்கள் ஓடி வந்து அவரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர். முன்பு, ரசிக்கப்பட்ட அவரது வரம்பு மீறல்கள் இப்போது எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும், ஜார்வோவின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சந்தேகத்தின் பேரில் கைது
இனிமேலும் இதை விட்டு வைத்தால், விளையாட்டு நிச்சயம் வினையாகிவிடும் என்பதை உணர்ந்த இங்கிலாந்து காவல்துறை, ஜார்வோவை தற்போது கைது செய்துள்ளது. இதுகுறித்து, பிரிட்டன் காவல்துறை ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், "செப்டம்பர் 3 வெள்ளிக்கிழமை அன்று ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஒரு சம்பவத்தைத் தொடர்ந்து ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். அவர் தெற்கு லண்டன் காவல் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்" என்று தெரிவித்துள்ளது.

தீவிர நடவடிக்கை
பிரிட்டிஷ் ஊடகங்களுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அளித்துள்ள பேட்டியில், "பிட்சில் இது போன்ற நடந்து கொண்டது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. வீரர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும் எந்தவொரு நடத்தையையும் இங்கிலாந்து வாரியம் பொறுத்துக்கொள்ளாது. பாதுகாப்பை கடுமையாக்கும் அனைத்து செயல்பாடுகளையும் நாங்கள் மேற்கொண்டுள்ளோம்" என்று தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











