ம்க்கும்... இவரே இம்புட்டு ரன் எடுத்தா மத்தவங்க எப்படி விளையாடுறது...!
லண்டன்: இங்கிலாந்தில் ஒரு உலக சாதனை நடந்துள்ளது.. கிரிக்கெட் போட்டி ஒன்றில் அதிக ரன் குவித்தது தொடர்பாக. உள்ளூர் கிளப் போட்டி ஒன்றில் ஆடிய லிவிங்ஸ்டன் என்ற வீரர் அதிரடியாக ஆடி 350 ரன்களைக் குவித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்த லிவிங்ஸ்டன் இப்படி ஆடிய காரணத்தால் அவரது அணி 500 ரன் வித்தியாசத்தில் பலே வெற்றியைப் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சில நேரங்களில் கிரிக்கெட் உலகில் எமகாதக சாதனைகள் படைக்கப்படுவது வழக்கம். அந்த மாதிரியான சாதனை ஒன்று இங்கிலாந்தில் படைக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் தேசிய கிளப் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில்தான் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.
நான்ட்விச் கிரிக்கெட் கிளப்புக்கும், கால்டி கிரிக்கெட் கிளப்புக்கும் இடையே நடந்த போட்டியின்போது நான்ட்ச்விச் கிளப்பைச் சேர்ந்த 21 வயது வீரர் லியாம் லிவிங்ஸ்டன் என்பவர் அதிரடியாக பேய்த்தனமாக ரன் குவித்தார்.
வெறும் 138 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 350 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 34 பவுண்டரிகளும், 27 சிக்ஸர்களும் அடக்கமாகும்.
இதன் காரணமாக நான்ட்விச் அணி 45 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 579 ரன்களைக் குவித்து விட்டது.
எந்த வகையான ஒரு நாள் போட்டியிலும் இதுதான் தனிப்பட்ட ஒரு வீரரின் சாதனையாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு இந்தியாவின் நிகிலேஷ் சுரேந்திரன் (வயது 15), 2008மாவது ஆண்டில் ஹைதராபாத்தில் நடந்த பள்ளி போட்டி ஒன்றில் 334 ரன்கள் விளாசியதே இதுவரை சாதனையாக இருந்து வந்தது.

நான்ட்விச் அணியின் இமாலய ஸ்கோரை துரத்திய கால்டி அணி வெறும் 79 ரன்களில் நசுங்கிப் போய், 500 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் தோல்வியைத் தழுவியது.
கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிராக மான்செஸ்டரில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியின்போது இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராடுக்குப் பதில் சப்ஸ்டிடியூட் பீல்டராக செயல்பட்டுள்ளார் லிவிங்ஸ்டன் என்பது நினைவிருக்கலாம்.
விரைவில் இங்கிலாந்து அணியின் ஆடும் லெவனில் அவர் இடம் பெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications