"பாலியல்" ட்வீட்.. காலையில் ஹீரோ.. மாலையின் வில்லன் - மன்னிப்பு கேட்ட இங்கிலாந்து பவுலர்
லண்டன்: நியூசிலாந்து அணியின் இரண்டு விக்கெட்டுகளை தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே வீழ்த்தி, அதகளம் புரிந்த இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர் ஓலே ராபின்சன், அதே நாளில் தனது பெயரை ஒட்டுமொத்தமா டேமேஜ் செய்திருக்கிறார்.
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் போட்டி, லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று (ஜூன்.2) தொடங்கியது.
இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் ஓலே ராபின்சன் மற்றும் ஜேம்ஸ் பிரேஸே ஆகியோருக்கு முதன் முதலாக டெஸ்ட் கிரிக்கெட் வாய்ப்பு வழங்கப்பட்டது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்துள்ளது.

பெரும் சிக்கல்
இப்போட்டியில் அறிமுகம் செய்யப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஓலே ராபின்சன், தொடக்க வீரர் டாம் லாதமை போல்டாக்கினார். ஆஃப் ஸ்டெம்ப்புக்கு வந்த பந்தை டிஃபன்ஸ் ஆட முயன்ற போது, பந்து இன்சைட் எட்ஜ் ஆகி போல்டானார். இதன் மூலம், தனது முதல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் இன்னிங்சிலேயே முதல் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். அதுமட்டுமின்றி மற்றொரு சீனியர் வீரர் ராஸ் டெய்லரையும், எல்பிடபிள்யூ ஆக்கி வெளியேற்றினார். முதல் போட்டியின் முதல் நாளிலேயே, இரு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, தேர்வுக்குழுவினரின் நம்பிக்கையை சம்பாதித்த ஓலே ராபின்சன் இப்போது பெரும் சிக்கலில் சிக்கியுள்ளார்.

பாலியல் ட்வீட்
அதாவது, 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் அவர் தனது ட்விட்டரில் இனவெறி மற்றும் பாலியல் குறித்து செய்த டிவீட்ஸ் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. குறிப்பாக, அவரது ட்வீட் ஒன்றில், "வீடியோ கேம்ஸ் விளையாடும் பெண்கள், உண்மையில் கேம்ஸ் விளையாடாத பெண்களை விட அதிக உடலுறவு கொள்கிறார்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார். இதுபோல், இனவெறி குறித்தும் அவர் ட்வீட் செய்திருக்கிறார்.

நான் செக்சிஸ்ட் அல்ல
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் பதிவிட்ட ட்வீட் இப்போது சர்ச்சையாக, அதற்கு ராபின்சன் பகிரங்க மன்னிப்பு கேட்கிறார். இதுகுறித்து அவர், எனது தொழில் வாழ்க்கையின் இந்த மிகப் பெரிய நாளில், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் பதிவிட்ட இனவெறி மற்றும் பாலியல் ட்வீட்களைப் பற்றி நான் வெட்கப்படுகிறேன். நான் இனவெறியாளன் அல்ல, நான் sexist அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மன்னிக்க முடியாது
எனது செயல்களுக்கு நான் மிகவும் வருந்துகிறேன், இதுபோன்ற கருத்துக்களை தெரிவிப்பதில் நான் வெட்கப்படுகிறேன். நான் சிந்தனையற்றவனாகவும் பொறுப்பற்றவனாகவும் இருந்தேன், அந்த நேரத்தில் எனது மனநிலையை மீறி நான் செய்த செயல்கள் மன்னிக்க முடியாதவை.

கடுமையாக உழைத்தேன்
அந்தக் காலத்திலிருந்து நான் ஒரு நபராக முதிர்ச்சியடைந்தேன். எனது ட்வீட்டுகளுக்கு முழுமையாக வருந்துகிறேன். இன்று களத்தில் நான் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் எனது அறிமுக டெஸ்ட் போட்டி அறிமுகத்தில் எனது பெருமை பற்றியதாக இருக்க வேண்டும், ஆனால் கடந்த காலத்தில் எனது சிந்தனையற்ற நடத்தை இதைக் கெடுத்துவிட்டது. கடந்த சில ஆண்டுகளில், எனது வாழ்க்கையை மாற்ற நான் கடுமையாக உழைத்தேன். நான் முதிர்ச்சியடைந்தேன். நான் புண்படுத்திய அனைவரிடமும், எனது அணி வீரர்கள் மற்றும் ஒட்டுமொத்த விளையாட்டிற்கும் நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications