பர்மிங்ஹாம்: ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெறுவதற்கு 281 ரன்களை இங்கிலாந்து அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் லயன் மற்றும் கம்மின்ஸ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.
ஆஷஸ் தொடரின் முதல் போட்டி பரபரப்பான கட்டத்தில் உள்ளது. 4ஆம் நாள் ஆட்டத்தை 28 ரன்களுடன் இங்கிலாந்து அணி தொடங்கிய நிலையில், ஜோ ரூட் - போப் கூட்டணி அதிரடியாக விளையாடியது. முதல் பந்திலேயே ஜோ ரூட் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டை முயற்சித்தார். இதன்பின்னர் கம்மின்ஸ் வீசிய தரமான யார்க்கரில் போப் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஜோ ரூட் 46 ரன்களிலும், ப்ரூக் 46 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால் இங்கிலாந்து அணி 150 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இதன்பின்னர் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் - பேர்ஸ்டோவ் கூட்டணி அதிரடியாக ரன்கள் சேர்த்தது. இவர்களை கட்டுப்படுத்த ஒரு பக்கம் கம்மின்ஸ் பவுன்சர்களை வீச, இன்னொரு பக்கம் லயன் சுழலை ஜாலம் செய்து அசத்தினார். இதனால் லயன் பந்துவீச்சில் பேர்ஸ்டோவ் 20 ரன்களில் ஆட்டமிழக்க, கம்மின்ஸ் வீசிய பந்தில் பென் ஸ்டோக்ஸ் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
7 விக்கெட்டுகள் சரிந்த நிலையில் இங்கிலாந்து அணியை விரைவாக வீழ்த்த ஆஸ்திரேலிய அணி அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. ஆனால் மொயின் அலி 19 ரன்களிலும், ராபின்சன் 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி எளிதாக 250 ரன்களை கடந்தது. பின்னர் கடைசி விக்கெட்டுக்கு இணைந்த ஆண்டர்சன் - பிராட் கூட்டணி சில பவுண்டரிகளை விளாச, ஆஸ்திரேலிய அணியின் இலக்கு பெரிதாகி கொண்டே சென்றது. பின்னர் வந்த கம்மின்ஸ் ஆண்டர்சனை 12 ரன்கள் வீழ்த்தினார்.
இதனால் இங்கிலாந்து அணி 273 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் கம்மின்ஸ் மற்றும் லயன் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். இதன் காரணமாக முதல் இன்னிங்ஸில் 7 ரன்கள் முன்னிலையுடன் சேர்த்து ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற 281 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்றைய நாளில் 40 ஓவர்கள் மீதமிருக்கும் சூழலில், 5ஆம் நாள் ஆட்டமும் மீதமுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய அணி விக்கெட்டை காத்து விளையாடினாலே எளிதாக வெற்றிபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.