பிர்மிங்காம்: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 15 பேர் கொண்ட அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இடம் பெற்றுள்ளார். அவர் முதல் போட்டியில் விளையாடவில்லை. நீண்ட காலமாக இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம் பெறாமல் இருந்து வந்த அவர், தற்போது 4 ஆண்டுகளுக்கு பிறகு காயத்திலிருந்து மீண்டு அணிக்குத் திரும்பி இருக்கிறார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர் என்பதால், இது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இதில் முதல் போட்டி லீட்ஸ் நகரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இதை அடுத்து, இந்த தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை வகித்து வருகிறது. முதல் போட்டியிலேயே தோல்வியடைந்த நிலையில், இந்திய அணி அதிலிருந்து மீண்டு வர வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளது. மறுபுறம் இங்கிலாந்து அணி தனது பந்துவீச்சை மேலும் வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது. முதற்கட்டமாக ஜோஃப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து உத்தேச அணியில் இடம் பெற்று இருக்கிறார்.
இந்த ஒரு மாற்றத்தை தவிர இங்கிலாந்து உத்தேச அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 15 வீரர்கள் அடங்கிய இங்கிலாந்து அணி விவரம் -
2வது டெஸ்டில் பங்கேற்க உள்ள இங்கிலாந்து அணி:
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்)
ஜோஃப்ரா ஆர்ச்சர்
ஷோயப் பஷீர்
ஜேக்கப் பெத்தேல்
ஹாரி புரூக்
பிரைடன் கார்ஸ்
சாம் குக்
ஜாக் கிராலி
பென் டக்கெட்
ஜேமி ஓவர்டன்
ஓலி போப்
ஜோ ரூட்
ஜேமி ஸ்மித்
ஜோஷ் டோங்
கிறிஸ் வோக்ஸ்
ஜோஃப்ரா ஆர்ச்சர் கடந்த 4 ஆண்டுகளாக இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக அவர் 2021 பிப்ரவரி மாதம் இங்கிலாந்து அணிக்காக விளையாடி இருந்தார். 30 வயதாகும் அவர் தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு இங்கிலாந்து அணியில் இடம் பெற்றிருக்கிறார்.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் நன்றாகவே இருந்தது. மொத்தம் ஐந்து வீரர்கள் சதம் அடித்தனர். ஏனெனில், முதல் போட்டி நடந்த ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. ஆனால், இனிவரும் போட்டிகளும் அதேபோல பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்களில் நடைபெறும் என எதிர்பார்க்க முடியாது.
இந்த நிலையில் தான் இங்கிலாந்து அணி ஜோப்ரா ஆர்ச்சரை அணியில் சேர்த்து இருக்கிறது. இனிவரும் போட்டிகளில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் அமைக்கப்படும் பட்சத்தில் ஜோப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் சந்திப்பது சவாலானதாகவே இருக்கும்.
இனி ஜோப்ரா ஆர்ச்சருக்கு எதிராக பேட்டிங் செய்வதற்கு இந்திய வீரர்கள் தனியாக பயிற்சி செய்ய வேண்டி இருக்கும் இது இந்திய அணிக்கு கூடுதல் அழுத்தத்தை கொடுத்துள்ளது