
இங்கிலாந்தின் இன்னிங்ஸ்
இந்த போட்டியின் முதல் நாளன்றே 500 ரன்களுக்கும் மேலாக அடித்துவிட்டது. இதனால் பிட்ச்-ன் மீது தொடர்ந்து விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. அந்த அணியில் ஜாக் கிராவ்லே (122), டக்கெட் (107), ஒல்லி போப் (108), ஹாரி ப்ரூக் (153) என 4 வீரர்கள் அடுத்தடுத்து சதம் விளாசி அசத்தினர். இதனால் பாகிஸ்தான் அணி என்ன செய்யப்போகிறது என ரசிகர்கள் குழம்பினர்.

பாகிஸ்தான் போராட்டம்
ஆனால் பாகிஸ்தான் அணியும், நாங்கள் சளைத்தவர்கள் கிடையாது என்பது போல ஆட்டம் காட்டினர். அந்த அணியின் ஓப்பனிங் வீரர்கள் அப்துல் சஃபிக் மற்றும் இமாம் உல் அக் ஜோடி யாராலும் பிரிக்க முடியாத வலுவான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். ஒருபுறம் அப்துல் 203 பந்துகளில் 114 ரன்களும், இமாம் 207 பந்துகளில் 121 ரன்களையும் அடித்து முதல் விக்கெட்டிற்கு 225 ரன்களை சேர்த்தனர்.

ரூட்டின் புத்திசாலிதனம்
இந்நிலையில் வலுவான நிலையில் இருந்த பாகிஸ்தானை வீழ்த்த இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் செய்த விஷயம் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆட்டத்தின் 73வது ஓவரில் ஒல்லி ராபின்சன் வீசவந்தார். அப்போது திடீரென ஜாக் லீச்சை அழைத்த ஜோ ரூட், அவரின் தொப்பியை கழட்டி திடீரென பந்தை அவரின் தலையில் வைத்து தேய்த்தது ஆச்சரியமாக இருந்தது. லீச்சிற்கு தலையில் முடி இல்லை என்பதால் அதில் பந்தை வைத்து தேய்த்து, அதன்பின்னர் பவுலிங்கிற்கு கொடுத்தார்.

என்ன காரணம்
நன்கு பயன்படுத்தப்பட்ட பந்தில் ஸ்விங் இருக்காது. எனவே அதில் ஈரத்தை தடவி நைசாக்கினால் புதிய பந்து போல ஸ்விங் ஆகும். இதற்காக முன்பெல்லாம் எச்சிலை தான் பயன்படுத்தினர். ஆனால் இந்தாண்டின் தொடக்கத்தில் அதற்கு ஐசிசி தடைவிதித்தது. இதனையடுத்து வீரர்கள் தங்களது வியர்வையை பயன்படுத்தி வருகின்றனர். அதற்காக தான் லீச்சின் தலையை ரூட் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

பலனளித்ததா?
ஜோ ரூட்டின் முயற்சிகள் பெரியளவில் கைக்கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும். தூண் போல நின்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் சதம் விளாசினார். இதனால் அந்த அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 430 ரன்களுக்கு மேல் குவித்து மிகவும் வலிமையான ஃபார்முடன் விளையாடி வருகிறது. இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.


Click it and Unblock the Notifications











