மும்பை: 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணி லீக் சுற்றோடு வெளியேறியுள்ளது சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. பரம எதிரியான ஆஸ்திரேலியாவின் இந்த ஆரம்பக்கட்ட வெளியேற்றம் குறித்து இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தேல் தனது மகிழ்ச்சியை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். "ஆஸ்திரேலியா வெளியேறியதை பார்க்க நன்றாக இருக்கிறது" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, குரூப் பி பிரிவில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறியதால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறாமல் தொடரை விட்டு வெளியேறியது.

ஆஸ்திரேலியாவின் இந்தச் சறுக்கல் குறித்து இங்கிலாந்து பேட்டர் ஜேக்கப் பெத்தேலிடம் கேட்கப்பட்ட போது, அவர் அதனை கேலியான முறையில் விமர்சித்தார். பிபிசி ஊடகத்திடம் பேசிய ஜேக்கப் பெத்தேல், "அவர்கள் வெளியேறியதைப் பார்க்க நன்றாக இருக்கிறது. இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணி தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவே இல்லை. லீக் சுற்றுப் போட்டிகளில் தொடக்கத்திலிருந்தே சிறப்பான ஆட்டத்தைக் கொடுக்கத் தவறினால், இதுபோன்று தொடரிலிருந்து வெளியேறும் ஆபத்து ஏற்படவே செய்யும். அந்த அணிக்கு இது ஒரு வருத்தமான விஷயம்தான்" என்று கூறினார்.
ஆஸ்திரேலிய அணி தனது முதல் லீக் போட்டியில் அயர்லாந்து அணியை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரமான தொடக்கத்தைப் பெற்றது. ஆனால், அதன் பிறகு அந்த வேகம் குறையத் தொடங்கியது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியைச் சந்தித்த ஆஸ்திரேலியா, அடுத்த போட்டியில் இலங்கை அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
தொடர்ந்து அடுத்த சுற்றுக்குச் செல்ல மற்ற அணிகளின் போட்டி முடிவுகளுக்காக ஆஸ்திரேலியா காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், பிப்ரவரி 17-ம் தேதி கண்டியில் நடைபெறவிருந்த ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதனால் ஆஸ்திரேலியாவின் சூப்பர் 8 கனவு அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது.
கடந்த 2024 டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு, ஆஸ்திரேலிய அணி 8 டி20 தொடர்களில் விளையாடி 5-ல் வென்றிருந்தது. இருந்தபோதிலும், தற்போதைய உலகக்கோப்பையில் அந்த அணியின் மோசமான ஆட்டத்தைப் பார்த்த ரசிகர்கள், ஆஸ்திரேலிய அணி டி20 கிரிக்கெட்டை விட டெஸ்ட் கிரிக்கெட்டிற்கே அதிக முக்கியத்துவம் அளிப்பதாக விமர்சித்தனர்.
ஆனால், இந்த விமர்சனங்களை ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா திட்டவட்டமாக மறுத்தார். அணி நிர்வாகமும் பயிற்சியாளர்களும் டி20 போட்டிகளுக்காகப் போதுமான அளவு பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், டி20 வடிவ கிரிக்கெட் மீது அணிக்கு எந்தவிதமான அக்கறையின்மையும் இல்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.
ஆஸ்திரேலிய அணி தொடரை விட்டு வெளியேறிய நிலையில், இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளது. குரூப் சி பிரிவில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து அணி, நேபாளத்தை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வியைத் தழுவியது. இருப்பினும், சுதாரித்துக்கொண்ட அந்த அணி ஸ்காட்லாந்து மற்றும் இத்தாலி அணிகளை வீழ்த்தி குரூப் சி பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
தற்போது சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து அணி தனது முதல் போட்டியில் கண்டியில் வைத்து இலங்கையை எதிர்கொள்கிறது. அதனைத் தொடர்ந்து அதே மைதானத்தில் பாகிஸ்தானையும், பின்னர் கொழும்பில் நியூசிலாந்து அணியையும் எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது.