லண்டன்: "பேஸ்பால் (Bazball) என்று சொல்லி கிரிக்கெட்டை நாசமாக்கியது போதும்.. முதல்ல கோச் மெக்குல்லத்தை வீட்டுக்கு அனுப்புங்க.." என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஜெஃப்ரி பாய்காட் ஆவேசமாக வெடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2025-26 ஆஷஸ் தொடரில், இங்கிலாந்து அணி 0-3 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்துத் தொடரை இழந்துவிட்டது. மெக்குல்லம் - பென் ஸ்டோக்ஸ் கூட்டணியின் இந்த "அதிரடி அணுகுமுறை" (Bazball) படுதோல்வியை சந்தித்துள்ளதால், முன்னாள் வீரர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

இங்கிலாந்து அணியின் இந்த மோசமான தோல்வி குறித்து 'தி டெலிகிராஃப்' பத்திரிகையில் எழுதியுள்ள பாய்காட், மெக்குல்லம் மற்றும் ஸ்டோக்ஸை கிழித்துத் தொங்கவிட்டுள்ளார். "இவர்களிடம் பொது அறிவை விட ஆணவம் தான் அதிகமாக உள்ளது. ஸ்டோக்ஸ் மற்றும் மெக்குல்லம் இருவரும் எங்குமே செல்லாத ஒரு குழியைத் தோண்டிக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் திட்டம் வேலை செய்யவில்லை என்றால், அதை மாற்றுவது தான் புத்திசாலித்தனம். ஆனால் இவர்கள் அதைச் செய்வதில்லை.
உடனடியாக பயிற்சியாளர் மெக்குல்லத்தை நீக்க வேண்டும். வெறும் வாய்ப் பேச்சு மட்டும் தான் இவர்களிடம் உள்ளது, செயல் இல்லை. பெரிய அணிகளுக்கு எதிராக இவர்களால் ஜெயிக்க முடியவில்லை. ரசிகர்களுக்கும் இவர்களின் இந்த நாடகத்தைப் பார்த்து சலிப்பு தட்டிவிட்டது" என்று பாய்காட் விளாசியுள்ளார்.
பயிற்சியாளரை மட்டுமல்ல, கேப்டன் பென் ஸ்டோக்ஸுக்கும் பாய்காட் எச்சரிக்கை விடுத்துள்ளார். "ஸ்டோக்ஸ் சிறந்த வீரர், அவரை இழக்க வேண்டாம் என்று தான் நினைப்போம். ஆனால், இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய இயக்குனர் ராப் கீ ஸ்டோக்ஸை நேரில் அழைத்து பேச வேண்டும். 'உன் ஆட்ட முறையை மாற்றிக்கொள், புதிய யோசனைகளை ஏற்றுக்கொள்' என்று சொல்ல வேண்டும். அப்படி அவர் கேட்கவில்லை என்றால், தயவுசெய்து புதிய கேப்டனை தேடுங்கள். ஒரு தனி நபரை விட அணி தான் முக்கியம்" என்று கூறியுள்ளார்.
மெக்குல்லத்தை நீக்கிவிட்டு, பாகிஸ்தான் முன்னாள் பயிற்சியாளர் ஜேசன் கில்லஸ்பி அல்லது அலெக் ஸ்டூவர்ட் ஆகியோரை பயிற்சியாளராக நியமிக்கலாம் என்று பாய்காட் யோசனை கூறி உள்ளார். அதேபோல், "ஹாரி ப்ரூக்கை கேப்டனாக நியமிக்கலாம் என்று நினைக்காதீர்கள். பொறுப்பில்லாமல் ஷாட் அடிக்கும் ஹாரி ப்ரூக் எப்படி மற்றவர்களுக்கு கேப்டனாக ஆலோசனை அளிக்க முடியும்?" என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மெல்போர்னில் வரும் டிசம்பர் 26 அன்று 'பாக்சிங் டே' டெஸ்ட் தொடங்குகிறது. அதற்குள் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கை எடுக்குமா? அல்லது 5-0 எனத் தொடரை இழக்கும் வரை வேடிக்கை பார்க்குமா?