மும்பை:அலஸ்டர் குக் தலையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி கடந்த செவ்வாய்க்கிழமை மும்பை வந்தது.
பங்களாதேஷுடனான போட்டிகளை நிறைவு செய்த இங்கிலாந்து அணி, இந்தியாவுடனான 5 டெஸ்ட் போட்டிகளை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் மோதும் முதல் போட்டி வரும் 9ஆம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது.

இது இருநாடுகளுக்கும் இடையிலான 85வது டெஸ்ட் போட்டி ஆகும். மும்பையில் சில நாட்கள் தங்கும் அந்த அணியினர் 5ஆம் தேதி கிரிக்கெட் கிளப்பின் பிராபோர்ன் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து 6ஆம் தேதி இங்கிலாந்து இந்தியாவுடன் முதல் போட்டியை எதிர்கொள்ள ராஜ்கோட் புறப்படுகிறது.இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்திலும் 3வது போட்டி மொகாலியிலும் 4வது போட்டி மும்பையிலும் கடைசி போட்டி சென்னையிலும் நடைபெறுகிறது.
இங்கிலாந்து அணியில் அலஸ்டர் குக்(கேப்டன்), மொய்ன் அலி, கேரி பேல்லன்ஸ், கரேத் பேட்டி, ஸ்டூவர்ட் பிராட், ஜோஸ் பட்லர், பென் டக்கெட், ஸ்டீவ் ஃபின், எச் ஹமீத், அடில் ரஷித் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் நியூஸிலாந்தை மண்ணை கவ்வச் செய்த இந்திய அணி இங்கிலாந்தையும் வீழ்த்துமா என்ற ஆர்வத்துடன் போட்டியை காண ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.