திண்டுக்கல்: ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் நேதன் லயன் 8 விக்கெட்டுகளை வீழ்த்த இங்கிலாந்து அணியின் பேஸ் பால் திட்டமே காரணம் என்று இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷல் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிரட்டலான வெற்றியை பதிவு செய்தது. இதற்கு ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் நேதன் லயன் 8 விக்கெட்டுகள் வீழ்த்தியதோடு, பேட்டிங்கிலும் சிறந்த பங்களிப்பை அளித்ததே முக்கியக் காரணமாக அமைந்தது. இந்த நிலையில் ஆஷஸ் தொடர் குறித்து இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.

அதில், இங்கிலாந்து அணியின் மூளைக்குள் இனி சிறிதாக ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும். அடுத்தமுறை இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்யும் போது, நிச்சயம் ஒன்றுக்கு இருமுறை சிந்திப்பார்கள். ஆனால் ஒரேயொரு போட்டியில் தோல்வியடைந்ததால், இங்கிலாந்து அணி மாறப் போவதில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இரு நாட்களில் செய்யும் தவறுகள், கடைசி நாளில் பாதிப்பை ஏற்படுத்தும். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் டிக்ளேர் செய்தது, ஓய்வறையில் இருந்தவர்களுக்கு சிறிய தயக்கத்தை ஏற்படுத்தி இருக்கும்.
அதேபோல் ஆஸ்திரேலிய அணி ஓய்வறையில் இருந்தவர்களுக்கு சிறிய நம்பிக்கையை கொடுத்திருக்கும். முதல் போட்டியில் வென்றுள்ளதால், ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடரை வெல்லும் என்று எதிர்பார்க்கலாம். ரசிகர்களின் ஆதரவும் ஆஸ்திரேலிய அணிக்கு அதிகமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து அணியின் பேஸ் பால் திட்டத்தால், ஸ்பின்னர்களின் ரோல் கூடுதல் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவேளை இங்கிலாந்து அணி மரபு சார்ந்த டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடி இருந்தால், நேதன் லயன் 4 முதல் 5 விக்கெட்டுகளை தான் வீழ்த்தி இருக்க முடியும். ஆனால் இங்கிலாந்து அணி பேஸ் பால் திட்டத்துடன் களமிறங்கியதால், லயனால் 8 விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது. எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் வழக்கமாகவே ஸ்பின் எடுக்கும். அதனை பயன்படுத்தி நேதன் லயன் மிகச்சிறப்பாக பந்துவீசியதாக பாராட்டியுள்ளார்.