லண்டன்: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் சதம் அடித்ததன் மூலம், இங்கிலாந்து வீரர் ஜானி பெயர்ஸ்டோவ் புதிய சாதனையை படைத்திருக்கிறார்.
உலக கோப்பை தொடர் லீக் போட்டி நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஜேசன் ராய், பெயர்ஸ்டோவ் ஜோடி இங்கிலாந்துக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தது.
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 123 ரன்களை சேர்த்தது. 60 ரன்கள் எடுத்திருந்த போது நீஷம் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார் ஜேசன் ராய். எனினும் நிதானமாக விளையாடிய பெயர்ஸ்டோவ் சதம் அடித்து அசத்தினார். 106 ரன்கள் எடுத்த போது ஹென்றியின் பந்தில் ஆட்டமிழந்தார்.
இந்த போட்டியில், ஜேசன் ராய், பெயர்ஸ்டோவ் ஜோடி உலக கோப்பை தொடரில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி 3 முறை 100 ரன்களுக்கு மேல் அடித்து சாதனை படைத்துள்ளது. முன்னதாக கில்கிறிஸ்ட், ஹெய்டன் ஜோடி 2007ம் ஆண்டும், பின்ச்,வார்னர் ஜோடி இந்தாண்டு உலக கோப்பை தொடரிலும் இந்த சாதனையை படைத்திருக்கின்றனர்.
இதேபோல் ஒரு நாள் தொடரில் குறைந்த போட்டிகளில் 10 முறை 100 ரன்களுக்கு மேல் அடித்த வீரர்களின் பட்டியலில் ஜேசன் ராய், ஜானி பெயர்ஸ்டோவ் ஜோடி இடம்பெற்றுள்ளது. இந்த ஜோடி 35 போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. 34 போட்டிகளில் ஆம்லா, டி வில்லியர்ஸ் ஜோடி இந்தச் சாதனையை படைத்து 2ம் இடத்தில் உள்ளது.