லண்டன் : ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவிடம் 4-1 என்ற கணக்கில் தோல்வியடைந்த நிலையில், தலைமைப் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தனது அணுகுமுறையில் சில மாற்றங்களைச் செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். எனினும், தாம் என்ன செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் தமக்கு சொல்வது பிடிக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
மெல்பெர்னில் கிடைத்த ஒரே ஆறுதல் வெற்றியைத் தவிர, இங்கிலாந்து அணி பெர்த், பிரிஸ்பேன் மற்றும் அடிலெய்டில் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியது. ஆஸ்திரேலியா வெறும் 11 நாட்களில் ஆஷஸ் கோப்பையை மீட்டது, இங்கிலாந்தின் மோசமான தோல்விக்கு இது வித்திட்டது.

இது குறித்து பேசிய மெக்கல்லம், "அனைத்து விளையாட்டுகளிலும் முன்னேற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சிக்கு நான் முழு ஆதரவு தருபவன். எது செயல்படும் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. அதேபோல், எங்கு மேம்படுத்த வேண்டும், எங்கு வளர வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறேன்."
மேலும், "நான் உதவி பெறுவதை எதிர்க்கவில்லை. ஆனால், வீரர்களிடமிருந்து சிறந்ததைக் கொண்டு வருவது எப்படி என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது. தனிப்பட்ட முறையில், 'நான் எதைச் சிறப்பாகச் செய்திருக்க முடியும்? எதை மேம்படுத்த முடியும்?' என்று சிந்திப்பேன். எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று கட்டளையிடப்படுவதை நான் நிச்சயமாக ஏற்க மாட்டேன்," எனத் தெரிவித்தார்.
ஆயினும், "மேம்படுத்துவதற்கு சில பகுதிகள் இல்லை என்று நான் முரட்டுப் பிடிவாதத்துடன் இருக்கவில்லை. கடந்த இரண்டு மாத கால நிகழ்வுகளை ஆய்ந்து, புதிய வழிகளை வகுக்கும்போது, எனது முறைகளில் சில மாற்றங்களுடன் அதே அசைக்க முடியாத நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்வோம்," என பிரண்டன் மெக்கல்லம் விளக்கினார்.
இத்தொடர் தோல்விக்குப் பின், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் (ECB) தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட் கவுல்ட் ஒரு "முழுமையான மறுஆய்வு" நடைபெறுவதாகவும், பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அணி பாடங்களைக் கற்று 2027-ல் ஆஷஸ் கோப்பையை மீட்க கவனம் செலுத்தும் எனவும் கூறினார்.
இங்கிலாந்தின் அடுத்த திட்டங்களில் இலங்கை அணியுடனான வெள்ளைப் பந்து சுற்றுப்பயணம் மற்றும் டி20 உலகக் கோப்பை ஆகியவை அடங்கும். உள்நாட்டில் நியூசிலாந்துக்கு எதிரான அடுத்த டெஸ்ட் தொடர் ஜூன் மாதம் நடைபெறும். சில முக்கிய மாற்றங்கள் வரவிருக்கும் மாதங்களில் அமல்படுத்தப்படும் என்றும் கவுல்ட் மேலும் தெரிவித்தார்.