
டாஸ் முடிவு
இரு அணிகளும் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியுள்ளது. இந்திய அணியில் க்ருணால் பாண்டியா மற்றும் பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் முதல் சர்வதேச ஒரு நாள் போட்டியில் அறிமுகமாகினர். மேலும் டி20 தொடரில் தொடர்ந்து சொதப்பிய கே.எல்.ராகுல் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

முதலில் பேட்டிங்
போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் - ஷிகர் தவான் ஜோடி நிதானமான தொடக்கத்தை கொடுத்தனர். எனினும் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ரோகித் சர்மா 28 ரன்களுக்கு பட்லரிடம் கேட்ச் ஆனார்.

பார்ட்னர்ஷிப்
இதனையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலி - ஷிகர் தவான் சிறப்பாக ஆடினர். டி20 தொடரில் செயல்பட்டதை போலவே இப்போட்டியிலும் நன்றாக ஆடிய விராட் கோலி அரை சதமடித்து (56) அவுட்டானார். மறுமுனையில் தொடர்ந்து அதிரடி காட்டிய ஷிகர் தவான் சதமடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 98 ரன்கள் அடித்திருந்த போது ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டுடன் சேர்ந்து சதத்தையும் பரிக்கொடுத்தார்.

இந்தியா தடுமாற்றம்
இதனையடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 6 ரன்களுக்கும், ஹர்த்திக் பாண்டியா 1 ரன்னுக்கும் வெளியேறியதால் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாறியது. ஆனால் மறுமுனையில் தனது ஆட்டத்தை மீண்டும் நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த கே.எல்.ராகுல் முதலில் பொறுமையாக ஆடினார்.

எதிர்பார்க்காத ஆட்டம்
பின்னர் ஒன்றிணைந்த கே.எல்.ராகுல் மற்றும் அறிமுக வீரர் க்ருணால் பாண்டியா ஜோடி பந்தை துவம்சம் செய்தனர். அதிரடி காட்டிய க்ருணால் பாண்டியா அறிமுக போட்டியிலேயே அரை சதம் (58*) அடித்து அசத்தினார். அதே போல கே.எல்.ராகுலும் 43 பந்துகளில் ( 62 )ரன்களை எடுத்தார். இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்களை குவித்தது. 318 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி இங்கிலாந்து 2வது இன்னிங்ஸை தொடங்கவுள்ளது.


Click it and Unblock the Notifications