பிர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் வேண்டுமென்றே நேரத்தை வீணடிக்க முயற்சி செய்தார். இதைப் பார்த்து இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பண்ட் கோபமடைந்தார். அவர் அம்பயரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கேப்டன் சுப்மன் கில்லும் இதனால் எரிச்சல் அடைந்தார்.
இரண்டாவது நாள் ஆட்டத்தின் முடிவில் வேண்டுமென்றே நேரத்தை வீணடிப்பதற்காக ஹாரி ப்ரூக் இவ்வாறு நடந்து கொண்டார். ஒவ்வொரு பந்துக்காகவும் அவர் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டார்.

இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி அபாரமாக ரன்கள் குவித்து, முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் குவித்தது. கேப்டன் சுப்மன் கில் அதிகபட்சமாக 269 ரன்கள் சேர்த்தார். ரவீந்திர ஜடேஜா 89 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87 ரன்களும் எடுத்தனர். வாஷிங்டன் சுந்தர் 42 ரன்கள் சேர்த்திருந்தார்.
இரண்டாவது நாள் ஆட்ட நேரம் முடிவில், இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடத் தொடங்கியது. அப்போது குறைந்தபட்சம் 20 முதல் 25 ஓவர்கள் வீசுவதற்கான வாய்ப்பு இருந்தது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்திய அணி விக்கெட்டுகளை வீழ்த்தத் திட்டமிட்டது.
எதிர்பார்த்ததைப் போலவே இங்கிலாந்து அணியின் முதல் மூன்று விக்கெட்டுகள் விரைவாகச் சரிந்தன. இங்கிலாந்து அணி 25 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது.
அப்போது ஐந்தாம் வரிசையில் இறங்கிய ஹாரி ப்ரூக் ஜோ ரூட்டுடன் இணைந்து பேட்டிங் செய்தார். மேலும் விக்கெட் சரிந்து விடக்கூடாது என்பதற்காக வேண்டுமென்றே நேரத்தை வீணடித்தார் ஹாரி ப்ரூக். இதை விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்த துணை கேப்டன் ரிஷப் பண்ட் பார்த்துவிட்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
அவரும் கேப்டன் சுப்மன் கில்லும் அம்பயரிடம் முறையிட்டனர். ஆனாலும், அம்பயர் எந்த உறுதியான முடிவையும் எடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் இந்திய அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதை அடுத்து அம்பயர் ஹாரி ப்ரூக்குடன் பேசினார்.
இரண்டாவது நாள் ஆட்ட நேரம் முடிவில், இங்கிலாந்து அணி 77 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து இருந்தது. ஹாரி ப்ரூக் 30 ரன்களுடனும், ஜோ ரூட் 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதுபோன்ற நேர விரய உத்திகள் கிரிக்கெட் ஆட்டத்தின் வேகத்தைப் பாதிப்பதுடன், களத்தில் வீரர்களிடையே பதற்றத்தையும் ஏற்படுத்தும். அம்பயர்கள் இது போன்ற செயல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.