அஹமதாபாத் : இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதப் போகும் முதல் உலகக்கோப்பை போட்டியிலேயே இரண்டு முக்கிய வீரர்கள் விலகி இருகின்றனர்.
2023 உலகக்கோப்பை தொடரை சிறப்பாக நடத்த இந்தியா முயன்று வரும் நிலையில் முதல் உலகக்கோப்பை போட்டியிலேயே ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் காத்துக் கொண்டுள்ளது.
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் உலகக்கோப்பை போட்டியில் இரண்டு அணிகளிலும் ஒரு முக்கிய வீரர் ஆடப் போவதில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அஹமதாபாத்தில் நடைபெற உள்ள இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் ஆடப் போவதில்லை. அவர் ஏற்கனவே கால் மூட்டு சிகிச்சை எடுத்து உலகக்கோப்பை தொடருக்கு முன்பு தான் அணிக்கு திரும்பினார்.
பயிற்சிப் போட்டியில் பேட்டிங் மட்டுமே செய்த கேன் வில்லியம்சன் பீல்டிங் செய்யவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு பேட்டிங் செய்த கேன் வில்லியம்சன் இரண்டு போட்டிகளிலும் கலக்கினார். அதனால், அவர் முதல் உலகக்கோப்பை போட்டியில் வலுவான இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதில் மாற்றம் நடந்துள்ளது.
அவர் தன் காயத்தை பெரிதாக்கிக் கொண்டால் அடுத்த போட்டிகளில் ஆட முடியாமல் போய்விடும் என்பதால் முதல் சில போட்டிகளில் ஆட மாட்டார் என கூறப்படுகிறது.
மறுபுறம் இங்கிலாந்து அணியில் முன்னணி வீரர் பென் ஸ்டோக்ஸ் இடுப்பில் ஏற்பட்ட காயத்தால் முதல் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். கடந்த 2019 உலகக்கோப்பை தொடர் நாயகன் ஆன ஸ்டோக்ஸ் முதல் போட்டியிலேயே ஆடாதது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
சுமார் 1.34 லட்சம் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் அஹமதாபாத் மைதானத்தில் பிரம்மாண்டமாக உலகக்கோப்பை முதல் போட்டி நடந்தாலும் நட்சத்திர வீரர்கள் இருவர் இல்லாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.