ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் பலப் பரிட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.
இதில் நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லாத்தம், டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். முதலில் நியூசிலாந்து அணியில் பல முக்கிய வீரர்கள் காயம் காரணமாக இடம் பெறவில்லை. நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் டிம் சவுதிக்கு காயம் இன்னும் குணமடையாததால் அவர் இன்றைய ஆட்டத்தில் பங்கேற்கவில்லை.

இதேபோன்று கேப்டன் வில்லியம்சன் இன்னும் 100% உடல் தகுதியை எட்டவில்லை என்பதால் அவரும் இன்றைய ஆட்டத்தில் விளையாடவில்லை. இதைப் போன்று நியூசிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் டிம் செளதி, லோகி பெகுர்சனுக்கும் காயம் ஏற்பட்டிருப்பதால் அவர்கள் பிளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. இதேபோன்று சுழற் பந்துவீச்சாளர் இஸ் சோதிக்கும் காயம் ஏற்பட்டிருக்கிறது.
இதனிடையே இங்கிலாந்து அணியில் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் காயம் இன்னும் குணமடையாததால் அவரும் இன்றைய ஆட்டத்தில் விளையாடவில்லை. அதனால் முதல் ஆட்டத்திலேயே முக்கிய ஐந்து வீரர்கள் இல்லாதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து பேசிய நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லாத்தம், ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் தங்கள் அணி வீரர்கள் பல்வேறு மைதானங்களில் விளையாடிய அனுபவம் இருப்பதாக குறிப்பிட்ட அவர் இந்த தொடருக்காக தாங்கள் சிறப்பான முறையில் தயாராக இருப்பதாக தெரிவித்தார். அணியில் முக்கிய வீரர்கள் சிலர் இன்னும் நூறு சதவீதம் உடல் தகுதி எட்டாததால் பல மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறினார். இதனை தொடர்ந்து பேசிய இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர், தாமும் முதலில் பந்து வீசதான் முடிவு எடுத்திருந்தேன்.
நாங்கள் நியூசிலாந்துக்கு எதிராக உலகக் கோப்பை தொடருக்கு முன் நடந்த போட்டியில் சிறப்பாக விளையாடினோம். மனதளவில் நல்ல நிலையில் இருக்கின்றோம். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறுவோம் என நம்புகிறேன் என கூறினார். இதனிடையே டாஸ் வீசும் போது ரவி சாஸ்திரி நியூசிலாந்து அணியின் கேப்டன் பெயரை மறந்ததால் சிறிது நேரம் அப்படியே சிலை போல் நின்றார். அதன் பிறகு மைக்கில் இருந்து டாம் லாத்தம் எனக் தொலைக்காட்சி கலைஞர்கள் கூற சுதாரித்துக் கொண்ட ரவி சாஸ்திரி நியூசிலாந்து கேப்டன் பெயரை சரியாக கூறிவிட்டார்.