138 ஆண்டுகளில் இப்படி நடந்ததே இல்லை.. பாகிஸ்தான், இங்கிலாந்து சேர்ந்து விசித்திர டெஸ்ட் சாதனை
லண்டன்: இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்துள்ளது. இந்தத் தொடரில் இங்கிலாந்து மண்ணில் 138 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு விசித்திரமான வரலாற்றுச் சாதனை பதிவாகி உள்ளது.
இந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளைச் சேர்ந்த எந்தவொரு பேட்ஸ்மேனும் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. இதற்கு முன்பு 1888-ம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆஷஸ் தொடரில் தான் ஒரு சதம் கூட அடிக்கப்படாமல் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்தது. அதன்பிறகு 138 ஆண்டுகள் கழித்து தற்போது நடந்த இங்கிலாந்து - பாகிஸ்தான் தொடரில் தான் ஒரு வீரரால் கூட 100 ரன்களை எட்ட முடியவில்லை. ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது போன்ற ஒரு நிகழ்வு நடப்பது இது 8-வது முறையாகும்.

இந்தத் தொடரில் அதிகபட்சமாகப் பாகிஸ்தானின் சவுத் ஷகீல் 97 ரன்களும், ஷான் மசூத் 95 ரன்களும் எடுத்து சதத்தை நழுவவிட்டனர். இங்கிலாந்து தரப்பில் ஹாரி புரூக் அடித்த 91 ரன்களே அதிகபட்ச ஸ்கோராகும். பாகிஸ்தான் பேட்டர்கள் பெரும்பாலான இன்னிங்ஸ்களில் சொதப்பிய போதும், அவர்களது பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்து பேட்டர்களையும் சதம் அடிக்க விடாமல் கட்டுப்படுத்தினர்.
இந்தத் தொடரின் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 69 அரைசதங்கள் விளாசி, சச்சின் டெண்டுல்கரின் அதிக அரைசதங்கள் அடித்த உலக சாதனையை ஜோ ரூட் முறியடித்தார். மேலும், சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் ரன்கள் குவித்த ரிக்கி பாண்டிங்கின் உலக சாதனையையும் அவர் தகர்த்தார்.
கடந்த 1954-ம் ஆண்டு முதல் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் அணி, தனது 72 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து மண்ணில் ஒரு தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆனது இதுவே முதல் முறையாகும்.


Click it and Unblock the Notifications

