லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியை இலங்கை அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இருக்கிறது இலங்கை அணி. முன்னதாக இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இலங்கை அணி வென்று இருந்தது. இந்த வெற்றிகளால் சரிவில் இருந்த இலங்கை அணி மீட்சி அடைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் சனத் ஜெயசூர்யா!
கடந்த சில ஆண்டுகளாக இலங்கை அணி மிக மோசமான நிலையில் இருந்தது. முக்கிய அணிகளுக்கு எதிரான அனைத்து தொடர்களிலும் இலங்கை அணி தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்தது. 2023 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பையில் ஏற்பட்ட படுதோல்வி மற்றும் 2024 டி20 உலகக் கோப்பையில் ஏற்பட்ட தோல்விகளால் இலங்கை கிரிக்கெட் அணி நிலை குலைந்து இருந்தது.

இதை அடுத்து அந்த அணியின் பயிற்சியாளர் நீக்கப்பட்டார். அப்போதைய கேப்டன் பதவி விலகினார். புதிய பயிற்சியாளரை நியமிக்க அதிக நேரம் இல்லாததால் இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் இலங்கை அணி இந்திய அணிக்கு எதிரான டி20 தொடர் மற்றும் ஒரு நாள் தொடரில் மோதியது.
அப்போது டி20 தொடரில் இந்திய அணிக்கு அழுத்தம் கொடுத்த இலங்கை அணி, ஒரு நாள் தொடரில் 2 - 0 என வெற்றி பெற்றது. மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றிகளையும், ஒரு போட்டியில் டை-யும் செய்தது இலங்கை அணி. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற ஜாம்பவான் வீரர்கள் இருந்த இந்திய அணியை இலங்கை அணி வீழ்த்தியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மேலும், 2024 டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு பின் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆடிய இந்த தொடரில் இந்திய அணிக்கு ஒரு வெற்றி கூட கிடைக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இலங்கை அணியின் இந்த மிகப்பெரிய மாற்றத்திற்கு சனத் ஜெயசூர்யா தான் முக்கிய காரணம் என சுட்டிக் காட்டப்பட்டது. எனினும், சொந்த மண்ணில் கிடைத்த அந்த வெற்றியை விட இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து மண்ணிலேயே இலங்கை ஒரு போட்டியில் பெற்ற வெற்றி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
ஒரு அணி சிறந்த கிரிக்கெட் அணி என்பது டெஸ்ட் போட்டிகளில் கிடைக்கும் வெற்றியை வைத்தே தீர்மானிக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இங்கிலாந்து மண்ணில் இலங்கை அணி ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெற முடியவில்லை. இந்த நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இலங்கை அணி தோல்வி அடைந்திருந்தது.
அதன் பின் மூன்றாவது போட்டியில் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி உள்ளது. இதன் மூலம் இலங்கை அணி விரைவிலேயே படுதோல்விகளில் இருந்து வெற்றிகளை குவிக்கும் அணியாக மாறி உள்ளது. இதை எடுத்து பயிற்சியாளர் ஜெயசூர்யா அதிக கவனம் பெற்று இருக்கிறார். 1996 ஒருநாள் போட்டி உலக கோப்பையை இலங்கை அணிக்கு வென்று கொடுத்த உலகக்கோப்பை நாயகன் ஆவார் ஜெயசூர்யா. சிறந்த துவக்க வீரராகவும், ஆல் ரவுண்டராகவும் இலங்கை அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்து இருக்கிறார்.
சில மாதங்களிலேயே மிகப்பெரும் சரிவில் இருந்த இலங்கை அணியை மீட்டு எடுத்து இருக்கிறார் சனத் ஜெயசூர்யா. இதன் காரணமாக அவர் இலங்கை அணியின் நிரந்தர பயிற்சியாளராக நியமிக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இலங்கை அணியில் பதும் நிசங்கா, கமிந்து மெண்டிஸ், வெல்லாலகே போன்ற சிறந்த வீரர்கள் உருவாகியுள்ளனர். அவர்களை வழிநடத்த அனுபவம் வாய்ந்த ஜெயசூர்யா போன்ற ஒரு ஜாம்பவான் தான் சரியான தேர்வாகும்.