
கடந்த 8ம் தேதி துவக்கம்
கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிரிக்கெட் போட்டிகள் 117 நாட்களுக்கு பிறகு இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் கடந்த 8ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி
பயோ செக்யூர் முறையில் வீரர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி பின்பு இந்த போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் வீரர்களுக்கு அவ்வப்போது கொரோனா பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சௌதாம்டன் மற்றும் ஓல்ட் ட்ரப்போர்ட் ஆகிய இடங்களில் இந்த போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.

சொந்த ஊருக்கு சென்ற ஆர்ச்சர்
இரண்டாவது போட்டி நடைபெற்று வரும் நிலையில், மழையின் குறுக்கீடு காரணமாக நேற்றைய ஆட்டம் தடைபெற்றது. முதல் போட்டியல் 106 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் இந்த போட்டியில் இடம்பெறவில்லை. இந்த இடைவெளியை பயன்படுத்தி அவர் தனது சொந்த ஊரான ஹோவ்விற்கு சென்றார்.

மன்னிப்பு கேட்ட ஆர்ச்சர்
இந்நிலையில் அவர் விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டு அபராதம் மற்றும் எழுத்துப்பூர்வ எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் 5 நாட்கள் அவர் தனிமைப்படுத்தப்பட்டு, இடைபட்ட நேரத்தில் அவருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதில் நெகட்டிவ் வரும் பட்சத்தில் வரும் 21ம் தேதி அவர் மீண்டும் அணியில் இணைவார் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தன்னுடைய செயலுக்காக ஆர்ச்சர் மன்னிப்பு கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











