கிரிக்கெட் திருவிழா
46 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோதியது. லீக் ஆட்டம் முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு வந்தன.
இங்கிலாந்துக்கு ரூ.28 கோடி
அரையிறுதியில் வென்ற இங்கிலாந்தும், நியூசிலாந்தும் பைனலில் சந்தித்தன. பரபரப்பான இந்த போட்டி, சூப்பர் ஓவர் வரை சென்றது. முடிவில், இங்கிலாந்து முதல் முறையாக உலக சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது. அந்த அணிக்கு 28 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
நியூசி.க்கு ரூ. 14 கோடி
இந்த தொடருக்காக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மொத்தமாக ரூ.70 கோடியை பரிசு தொகையாக அறிவித்திருந்தது. 2வது இடம் பெற்ற நியூசிலாந்துக்கு ரூ.14 கோடி வழங்கப்பட்டது. சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு கடந்த முறை (2015) ரூ.26 கோடியும், 2வது இடம் பெற்ற அணிக்கு ரூ.12 கோடியும் வழங்கப்பட்டது. தற்போது இந்த இரண்டு தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பரிசுக் தொகை எவ்வளவு?
அரைஇறுதியில் தோல்வியடைந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு தலா ரூ.5 கோடியே 61 லட்சம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த உலக கோப்பை போட்டியில் அரைஇறுதியில் தோல்வி கண்ட அணிகளுக்கு ரூ.4 கோடியே 20 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. லீக் சுற்றில் அணிகளின் ஒவ்வொரு வெற்றிக்கும் ரூ.28 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது. லீக் சுற்றுடன் வெளியேறும் அணிகளுக்கு ரூ.70 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.