பெங்களூரு: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அபாரமாக பந்து வீசிய சாஹல் 6 விக்கெட்டை வீழ்த்தினார்.
இந்தியா - இங்கிலாந்து அணிக்கு எதிராக 3வது டி20 போட்டி பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. டாசில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே கேப்டன் விராட் கோஹ்லியின் விக்கெட்டை இழந்தது. லோகேஷ் ராகுல் 22 ரன்கள் எடுத்த நிலையில் போல்டு ஆனார்.
அதன் பின்னர் டோணி - ரெய்னா கூட்டணி அதிரடியாக ஆடியது. அபாரமாக ஆடிய சுரேஷ் ரெய்னா 45 பந்துகளில் 63 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த அதிரடி மன்னன் யுவராஜ் சிங் தனது பங்கிற்கு 3 சிக்சர்கள், இரண்டு பவுண்டரிகள் விளாசிவிட்டு 27 ரன்களில் மில்ஸ் வீசிய ஓவரில் ஆட்டமிழந்தார்.

இதனிடையே அதிரடி காட்டிய டோணி 19 வது ஓவரில் 56 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இதில் 2 சிக்சர்களும், 5 பவுண்டரிகளும் அடங்கும். இறுதி ஓவரில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, ஒரு சிக்சரை விளாச இந்தியா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது.
இந்தியாவைத் தொடர்ந்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 16.3 ஓவரில் 127 ரன்கள் எடுத்தபோது அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2 -1 என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியது.
இந்திய அணியில் அபாரமாக பந்து வீசி சாதனை படைத்த சாஹல் 6 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.