சென்னை: இந்தியா-இங்கிலாந்து நடுவே சென்னையில் இன்று தொடங்கிய 5வது டெஸ்ட் போட்டியில் டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 284 ரன்களை எடுத்துள்ளது. மொயீன் அலி அபாரமாக சதம் விளாசி ஆட்டமிழக்காமல் உள்ளார்.
3-0 என்ற கணக்கில் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றியுள்ள நிலையில் 5வது டெஸ்ட் போட்டி இன்று சென்னை, சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேிடயத்தில் தொடங்கியது.

போட்டி தொடங்கும் முன்பாக, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்காக முதலில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கருப்பு பேட்ஜ் அணிந்தபடி வீரர்கள் களமிறங்கினர்.
டாசில் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் குக் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அந்த அணியில், லியாம் டாவ்சன் அறிமுக வீரராக களமிறக்கப்பட்டார். ஸ்டூவர்ட் பிராடும் அணியில் சேர்க்கப்பட்டார். ஆன்டர்சன் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.
இந்திய அணியில் புவனேஸ்வர்குமார் மற்றும் ஜெயந்த் யாதவுக்கு பதிலாக இஷாந்த் ஷர்மாவும், அமித் மிஸ்ராவும் அணியில் சேர்க்கப்பட்டனர். நிதானமாகவே பேட்டிங்கை ஆரம்பித்து விக்கெட் அடிக்கடி விழாமல் பார்த்துக் கொண்டது இங்கிலாந்து அணி. ஆட்ட நேர இறுதியில் அந்த அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்திருந்தது.
மொயீன் அலி அதிகபட்சமாக 120 ரன்கள் விளாசியதோடு நாட்-அவுட்டாகவும் களத்தில் நிற்கிறார். ஜோ ரூட் 88 ரன்கள் எடுத்து அவுட்டானார். குக் 10, ஜென்னிங்ஸ் 1 ரன்களில் நடையை கட்டினர். ஜானி பெய்ர்ஸ்டோ 49 ரன்களில் அவுட்டாகி, 1 ரன்னில் அரை சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இஷாந்த் ஷர்மா 1 விக்கெட்டை சாய்த்தார். ரவிச்சந்திரன் அஸ்வின் தனது சொந்த ஊரான சென்னையில் இன்னும் கணக்கை ஆரம்பிக்கவில்லை. ரசிகர்கள் 2வது நாளான நாளை, அவரிடம் நிறைய எதிர்பார்ப்பார்கள்.
இந்திய அணி விவரம்: முரளி விஜய், லோகேஷ் ராகுல், புஜாரா, கோஹ்லி, கருண் நாயர், பார்திவ் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா.
இங்கிலாந்து அணி: அலஸ்டயர் குக், கீடான் ஜென்னிங்ஸ், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், ஜானி பெய்ர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், அடில் ரஷித், ஸ்டூவர்ட் பிராட், லியாம் டாவ்சன், ஜேக் பால்.