மும்பை : 2010 டி20 உலக கோப்பை தொடரில் என்ன நடந்தது? இந்தியா எத்தனை வெற்றிகள் பெற்றன? உலகக்கோப்பையை வென்றது யார்? என்பது குறித்து பார்க்கலாம்.
2010 டி20 உலக கோப்பை தொடரில், முதன் முறையாக ஆசிய அணிகள் அல்லாத இரண்டு அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இதற்கு முன் நடந்த இரண்டு டி20 உலக கோப்பைகளிலும் பாகிஸ்தான், இந்தியா, மற்றும் இலங்கை ஆகிய மூன்று அணிகளே இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தன.

இந்தியா ஒரு முறையும் பாகிஸ்தான் ஒரு முறையும் உலகக் கோப்பையைப் வென்று இருந்தன. மூன்றாவது டி20 உலக கோப்பையில், ஆசிய அணிகள் அல்லாத ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டியில் மோதின. அதில், இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று முதல் டி20 உலக கோப்பையை கைப்பற்றியது.
இந்த உலக கோப்பை தொடரில் குரூப் சுற்றில் 12 அணிகள் பங்கேற்றன. ஏ குரூப்பில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான், பி குரூப்பில் நியூசிலாந்து மற்றும் இலங்கை, சி குரூப்பில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா, டி குரூப்பில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின.
சூப்பர் 8 சுற்றில், குரூப் ஈ பிரிவில் இங்கிலாந்து தான் ஆடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றது. பாகிஸ்தான், நியூசிலாந்து, மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தலா மூன்று போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றன. பாகிஸ்தான் அணியின் நெட் ரன் ரேட் அடிப்படையில் இரண்டாம் இடத்தை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.
குரூப் எஃப் பிரிவில், ஆஸ்திரேலியா தான் ஆடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் இடத்தை பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. இலங்கை இரண்டு வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்தது. இந்த பிரிவில் இடம் பெற்று இருந்த இந்தியா மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து ஏமாற்றத்தை அளித்தது. 2009 டி20 உலக கோப்பை தொடரிலும் இந்தியா சூப்பர் 8 சுற்றில் ஒரு வெற்றி கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரையிறுதியில், ஆஸ்திரேலியா, பாகிஸ்தானை வீழ்த்தியது, இங்கிலாந்து, இலங்கையை வீழ்த்தியது. இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 147 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அதிரடியாக விளையாடி 17 ஓவர்களில் 148 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.