பாகிஸ்தான் வெற்றி
தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையில் திட்டமிடப்பட்டுள்ள 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கராச்சியின் நேஷனல் மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி வெற்றி கொண்டு தொடரில் 1க்கு 0 என்ற அளவில் முன்னிலையில் உள்ளது.
ஃபவாத் ஆலம் சதம்
இந்த போட்டியில் முதல் நாளில் 27 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறிய பாகிஸ்தான் அணி, இரண்டாவது நாளில் சுதாரித்தது. அணியின் ஃபவாத் ஆலம் சிறப்பாக விளையாடி சதமடித்து அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார். இதேபோல இந்த போட்டியின்மூலம் தனது அறிமுக போட்டியில் விளையாடிய நவ்மன் அலி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்
குறிப்பாக இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனம் பெற்றுள்ளார். இந்நிலையில் போட்டியில் விளையாடும்போது கடுமையான நெருக்கடியை உணர்ந்ததாகவும் குறிப்பாக நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் போட்டியில் விளையாடியது சர்வதேச அளவில் நெருக்கடியை அளித்ததாகவும் ஃபவாத் ஆலம் குறிப்பிட்டுள்ளார்.
திறமையே முக்கியம்
ஆனால் தான் டிரஸ்ஸிங் ரூமில் உற்சாகமாக இருந்ததாகவும் அது தனக்கு சிறப்பாக உதவியதாகவும் ஆலம் குறிப்பிட்டுள்ளார். மைதானத்தின் பிட்ச் மோசமான இருந்தாலும் அது குறித்து யோசிக்காமல் நம்முடைய திறமையை பயன்படுத்தி விளையாட வேண்டிய அவசியம் இருந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.