ஒரே நேரத்தில் 2 டீம்.. நாங்க ரெடி.. எங்களால முடியும்.. மார்கன் எல்லாத்துக்கும் ரெடியாமே!
லண்டன்: கொரோனாவைரஸ் பரவல் தொடர்ந்தால், சுருக்கமான முறையில் அதிக போட்டிகளை நடத்த வேண்டிய நிலை ஏற்படுமானால், ஒரே நேரத்தில் இரு வேறு அணிகளை வைத்து விளையாட வேண்டி வருமானால் நாங்கள் அதற்கும் தயார்தான் என்று இங்கிலாந்தின் இயான் மார்கன் கூறியுள்ளார்.
Recommended Video
இந்த மாதிரியான திட்டம் தீட்டப்பட்டால் அதை நான் ஆதரிப்பேன் என்றும் மார்கன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்த அணியின் கேப்டன்தான் மார்கன். தற்போது இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக ஜோ ரூட் இருக்கிறார்.
ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு மேற்கு இந்தியத் தீவுகள் அணி அல்லது பாகிஸ்தான் ஆகியவற்றில் ஏதாவது ஒரு அணி வந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு தரப்பு அணிகளும் மோதும் வாய்ப்புகள் உள்ளன. அதேபோல மார்கன் தலைமையிலான ஒரு நாள் அணியானது ஆஸ்திரேலியாவுடன் ஒரு நாள் தொடர் மற்றும் டி20 போட்டிகளில் மோத திட்டமிடப்பட்டுள்ளது.

2 அணிகளுக்கும் நாங்க ரெடி
இப்படி ஒரு சூழல் ஏற்படுமானால் அதற்கு நாங்கள் தயார்தான் என்று மார்கன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், இது அசாதரணமான சமயம். எனவே என்ன மாதிரியான சூழல் ஏற்பட்டாலும் அதை சந்திக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். இது மாதிரியான சூழலை இதற்கு முன்பு நான் சந்தித்தது இல்லை. யாருமே கூட இப்படி ஒரு சூழல் ஏற்படுவதை விரும்பவும் மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

பெரும் நஷ்டம்தான்
இயற்கையின் இந்த மோசமான கோபம் பொருளாதார ரீதியாகவும், ஆரோக்கியத்திலும் விளையாட்டைப் பாதித்துள்ளது. இப்படி ஒரு சூழல் ஏற்படும் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை என்றார் மார்கன். கொரோனாவைரஸ் பரவல் காரணமாக இங்கிலாந்தில் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளையும் மே 28ம் தேதி வரை தள்ளிப் போட்டுள்ளனர். இருப்பினும் ஜூன் 4ம் தேதி மேற்கு இந்தியத் தீவுகள் அணி திட்டமிட்டபடி வரும் என்று கூறப்படுகிறது.

சூழ்நிலையைப் பொறுத்தது
எங்களால் முடிந்த அளவுக்கு விளையாட்டு தொடர வேண்டும் என்று விரும்புகிறோம். வீரர்களும் கூட இதையே விரும்புவார்கள் என்று நம்புகிறேன். நிறைய கிரிக்கெட் போட்டிகளை ஒரே சமயத்தில் விளையாடும் நிலை ஏற்பட்டால் அதற்கும் வீரர்கள் தயாராக இருக்க வேண்டும். நான் தயாராக இருக்கிறேன். இருப்பினும் இப்போது எதுவும் சொல்ல முடியாது. உண்மை நிலவரத்தையும் நாம் பார்த்தாக வேண்டும். சூழ்நிலையைப் பொறுத்தது அது என்றும் அவர் கூறியுள்ளார்.

தேவை எனில் உள்ளரங்கில் விளையாடலாம்
ஒரு வேளை நாம் உள்ளரங்கத்தில் விளையாட வேண்டிய நிலை ஏற்படுமானால் அதையும் நாம் செய்ய வேண்டியதுதான். அதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அந்தப் போட்டிகளை சர்வதசே அளவில் நேரடியாக டிவி மூலம் ஒளிபரப்பும்போது அனைவருக்கும் அது மாரல் சப்போர்ட்டாகவும் அமையும். இதுபோல போட்டிகளை நடத்தலாம் என மருத்துவ நிபுணர்கள் பச்சைக் கொடி காட்டினால் தாராளமாக நாம் அதைச் செய்யலாம் என்றார் மார்கன்.


Click it and Unblock the Notifications