20 ஓவர் வெயிட் பண்ண முடியாது
மிடில்சக்ஸ் அணிக்காக டி20 பிளாஸ்ட் தொடரில் ஆடி வருகிறார் இயான் மார்கன். சோமர்செட் அணிக்கு எதிரான போட்டியில் இமாலய இலக்கை நோக்கி ஆடியது மிடில்சக்ஸ். இமாலய இலக்கு என்றாலும், வெறும் 17 ஓவர்களில் எட்டியது மிடில்சக்ஸ். அதற்கு ஒரே காரணம் இயான் மார்கன் தான்.
சோமர்செட் பேட்டிங்
முதலில் பேட்டிங் செய்த சோமர்செட் அணியில் மொத்தமே மூன்று பேட்ஸ்மேன்கள் தான் ரன் குவித்தனர். அவர்கள் எடுத்த ரன்களை கூட்டினாலே 200க்கு மேல் வந்துவிடும். துவக்க வீரர் பான்டன் 39 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார்.
ஆபெல் சதம்
கேப்டன் ஆபெல் 47 பந்துகளில் 101 ரன்கள் குவித்து அசத்தல் சதம் அடித்தார். இறுதியாக வந்த பைரோம் 20 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார். சோமர்செட் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்தது.
மிடில்சக்ஸ் பேட்டிங்
இமலாய் இலக்கு என்பதால் சோமர்செட் வெற்றி பெறும் என்றே பலரும் எண்ணினர். ஆனால், மிடில்சக்ஸ் அணியின் துவக்க வீரர்கள் 4 ஓவர்களுக்குள் 60 ரன்களை கடந்து ஆச்சரியம் அளித்தனர்.
அதிரடி துவக்கம்
மலன் 14 பந்துகளில் 41 ரன்களும், ஸ்டிர்லிங் 10 பந்துகளில் 25 ரன்களும் குவித்தனர். 3.5 ஓவர்களில் 67 ரன்களை எடுத்து இருந்தது சோமர்செட். அடுத்து ஏபி டி வில்லியர்ஸ், முகமது ஹபீஸ் களமிறங்கினர்.
டி வில்லியர்ஸ் எடுத்த ரன்கள்
ஹபீஸ் 18 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். டி வில்லியர்ஸ் 16 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார். 128 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தவித்தது. டி வில்லியர்ஸ் சென்ற பின் மிடில்சக்ஸ் வெற்றி பெறுமா? என்ற சந்தேகம் எழுந்தது.
மார்கன் வெறியாட்டம்
களத்தில் இயான் மார்கன் ஆடி வந்தார். அவர் "நானே எல்லா ரன்னையும் அடிச்சு முடிச்சுடுறேன்" என சூளுரை எடுத்துக் கொண்டு சிக்ஸராக விளாசித் தள்ளினார். 29 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார் மார்கன்.
சாதனை வெற்றி
8 சிக்ஸ், 5 ஃபோர் அடித்து அவர் மார்கன் பட்டையைக் கிளப்ப மிடில்சக்ஸ் அணி 17 ஓவர்கள் முடிவில் 226 ரன்களை கடந்து பெரிய வெற்றியை பதிவு செய்தது. 6 விக்கெட் வித்தியாசத்தில் சோமர்செட் அணியை வீழ்த்தியது. 2014இல் இதே டி20 பிளாஸ்ட் தொடரில் சசக்ஸ் அணி 226 ரன்களை சேஸிங் செய்து இருந்தது. அதை முறியடித்துள்ளது மிடில்சக்ஸ்.
பாராட்டிய மார்கன்
போட்டிக்குப் பின் பேசிய இயான் மார்கன், "துவக்க வீரர்கள் மலன், ஸ்டிர்லிங் அதிரடியாக ஆடியதால், நாங்கள் அனைவரும் முன்னதாகவே அடித்து ஆட முடிந்தது" என்று குறிப்பிட்டு பாராட்டினார்.