முனிச்: 2024 யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ஃபிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் நெதர்லாந்து அடித்த கோல் செல்லாது என ரெப்ரீ அறிவித்தார். இந்த போட்டியில் மொத்தமே ஒரே ஒரு கோல் மட்டுமே அடிக்கப்பட்டது. அதையும் செல்லாது என அறிவித்ததால் இந்த போட்டி டிராவில் முடிவடைந்தது.
யூரோ கோப்பை தொடரில் குரூப் டி பிரிவில் இடம் பெற்றுள்ள முன்னணி அணிகளான நெதர்லாந்து மற்றும் ஃபிரான்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இதில் நெதர்லாந்து அணி 69 வது நிமிடத்தில் கோல் அடித்தது. அந்த அணியின் ஸாவி சைமன்ஸ் கோல் அடித்தார். ஆனால், அப்போது ரெப்ரீ மற்றும் லைன் மேன் இருவரும் அந்த கோல் குறித்து பேசி அது செல்லாது என அறிவித்தனர்.

சைமன்ஸ் கோல் அடித்தபோது நெதர்லாந்து அணியின் டென்சல் டம்ப்ஃப்ரைஸ் கோல்கீப்பரை செயல்பட விடாமல் குறுக்கே நின்றதாக கூறப்படுகிறது. விதிப்படி இது தவறாக கருதப்படும் என்பதால், அந்த சமயத்தில் சைமன்ஸ் அடித்த கோல் செல்லாது என ரெப்ரீ அறிவித்தார். இதை அடுத்து நெதர்லாந்து வீரர்கள் உடைந்து போனார்கள்.
போட்டி முடிய 21 நிமிடங்களே மீதம் இருந்த நிலையில் கோல் அடித்தும் கிடைக்கவில்லை என்ற வருத்தத்துக்கு ஆளானார்கள். அதன் பின் போட்டி நேரம் முடியும் வரை இரண்டு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இந்தப் போட்டி டிராவில் முடிந்தது.
தற்போது குரூப் டி பிரிவில் நெதர்லாந்து அணி இரண்டு போட்டிகளில் ஆடி ஒரு வெற்றி, ஒரு டிரா பெற்று மொத்தம் 2 கோல் அடித்து முதல் இடத்திலும், ஃபிரான்ஸ் அணி இரண்டு போட்டிகளில் ஆடி ஒரு வெற்றி, ஒரு டிரா செய்து மொத்தம் ஒரு கோல் மட்டும் அடித்து இரண்டாவது இடத்திலும் உள்ளன. இதே பிரிவில் இடம் பெற்ற போலாந்து அணி இரண்டு போட்டிகளில் ஆடி இரண்டிலும் தோல்வி அடைந்ததை அடுத்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது.