பெர்லின்: 2024 யூரோ கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணியிடம் போர்ச்சுகல் அணி பெனால்டி ஷூட் அவுட் முறையில் தோல்வி அடைந்தது. இதை அடுத்து கால் இறுதி சுற்றுடன் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி வெளியேறியது.
மிகவும் எதிர்பார்ப்பை கிளப்பியிருந்த பிரான்ஸ் மற்றும் போர்ச்சுகல் அணிகளுக்கு இடையேயான யூரோ கோப்பை போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியின் முதல் பாதி மிகவும் மோசமாக சென்றது. இரண்டு அணிகளுமே கோல் அடிக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. இரண்டாவது பாதியில் இரண்டு அணிகளும் கோல் போஸ்ட் அருகே பந்தை கொண்டு சென்றாலும் தொடர்ந்து சொதப்பி வந்தன.

இரண்டாம் பாதியின் முடிவிலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதை அடுத்து கூடுதலாக 30 நிமிடங்கள் அளிக்கப்பட்டது. அந்த கூடுதல் நேரத்திலும் இரண்டு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. 120 நிமிடங்களின் முடிவில் போட்டி பெனால்டி ஷூட் அவுட்டிற்கு சென்றது. இதற்கு முன் நடந்த ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் ஸ்லோவேனியா அணிக்கு எதிராக போர்ச்சுகல் இதேபோல பெனால்ட்டி ஷூட் அவுட்டில் வெற்றி பெற்றிருந்தது.
அப்போது போர்ச்சுகல் அணியின் கோல் கீப்பர் டியாகோ கோஸ்டா சூப்பர் ஹீரோவாக மாறி அனைத்து கோல் முயற்சிகளையும் தடுத்து இருந்தார். அதேபோல இப்போதும் செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்தது. ஆனால், அதற்கு மாறாக பிரான்ஸ் அணி ஐந்து முறையும் பெனால்டி ஷூட் அவுட்டில் கோல் அடித்தது. போர்ச்சுகல் அணி தனது முதல் நான்கு முயற்சிகளில் ஒரு முறை கோல் அடிக்க தவறியது. அந்த அணியின் பெலிக்ஸ் கோல் அடிக்க தவறி இருந்தார். அந்த ஒரே ஒரு தவறால் இந்தபோ போட்டியில் தோல்வி அடைந்தது போர்ச்சுகல் அணி.
அதனால் 5 - 3 என்ற கோல் கணக்கில் பெனால்டி ஷூட் அவுட்டில் பிரான்ஸ் அணி போர்ச்சுகல் அணியை வீழ்த்தியது. போர்ச்சுகல் இந்த தோல்வியால் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது. போர்ச்சுகல் கடந்த இரண்டு போட்டிகளிலும் ஒரு கோல் கூட அடிக்காமல் பெனால்டி ஷூட் அவுட் வரை போட்டியை கொண்டு சென்று இருக்கிறது. இந்த நிலையில் தங்கள் அணியின் இந்த மோசமான செயல்பாட்டுக்கு மன்னிப்பு கேட்டார் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. அடுத்து நடைபெற உள்ள அரை இறுதியில் ஸ்பெயினை சந்திக்கிறது பிரான்ஸ்.