மும்பை: 17 ஆண்டுகளுக்கு பின் டி20 உலகக்கோப்பை தொடரை வென்று இந்திய அணி வரலாறு படைத்தது. இதன்பின் மும்பை திரும்பிய இந்திய வீரர்களுக்கு ரசிகர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வெற்றிப் பேரணியில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்ட நிலையில், வான்கடே மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை பிசிசிஐ தரப்பில் வழங்கப்பட்டது.
பிசிசிஐ வரலாற்றிலேயே இந்திய அணிக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச பரிசுத்தொகை இதுதான். இதனைத் தொடர்ந்து முன்னாள் வீரரான சேவாக், பிசிசிஐ அளித்துள்ள பரிசுத்தொகை வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு மட்டுமல்லாமல் தேர்வுக் குழு உறுப்பினர்களுக்கும் சேர்த்து வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இருந்தாலும் யார் யாருக்கு எவ்வளவு தொகை அளிக்கப்படும் என்ற விவரம் வெளி வராமலேயே இருந்தது.

அதுமட்டுமல்லாமல் பல்வேறு மாநில அரசுகளும் கிரிக்கெட் வீரர்களுக்கு பரிசுத்தொகை அளித்து வருகின்றன. இந்த நிலையில் பிசிசிஐ அளித்த பரிசுத்தொகையில் வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள், தேர்வுக் குழு உறுப்பினர்கள், ரிசர்வ் வீரர்கள் என்று அனைத்து தரப்பினருக்கும் எவ்வளவு தொகை அளிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.
அதன்படி இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட 15 வீரர்களுக்கு தலா ரூ.5 கோடி அளிக்கப்படவுள்ளது. அதேபோல் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு ரூ.2.5 கோடி பரிசு அளிக்கப்படவுள்ளது. இதன்பின் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் உள்ளிட்ட பயிற்சியாளர்கள் குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா ரூ.2.5 கோடி அளிக்கப்படவுள்ளது.
அதேபோல் உதவியாளர்கள், பிசியோதெரபிஸ்ட், ட்ரெயினர்கள் என்று அனைவருக்கும் தலா ரூ.2 கோடியும், தேர்வுக் குழுவினருக்கு தலா ரூ.1 கோடியும், ரிசர்வ் வீரர்களாக பயணித்த 4 பேருக்கும் தலா ரூ.1 கோடியும் அளிக்கப்படவுள்ளது தெரிய வந்துள்ளது. 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு தலா ரூ.80 லட்சமும், யுவராஜ் சிங்கிற்கு மட்டும் ரூ.1 கோடியும் அளிக்கப்பட்டுள்ளது. 17 ஆண்டுகளில் 5 மடங்கு பரிசுத்தொகை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.