மும்பை: பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் எப்படி அதிக பந்துகளை எதிர்கொண்ட பின் பெரிய ஸ்கோரை விளாசும் டெக்னிக்கை இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நாளை தொடங்கவுள்ளது. இதற்காக சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். ஏனென்றால் முன்பை போல் அல்லாமல் பாகிஸ்தான் அணி பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என்று அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், இந்தப் போட்டியில் இந்தியா வெற்றிபெறவே அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால் 2011ஆம் ஆண்டு முதலே இந்திய அணி பலம் வாய்ந்த அணியாக உள்ளது. அதேபோல் இந்திய அணிக்கு அனுபவம் வாய்ந்த கேப்டன், ஆடுகளத்தை அறிந்த வீரர்களும் இருக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தான் அணியும் இப்போது தங்களின் பலத்தை அதிகரித்துள்ளது. 6 முதல் 8 ஆண்டுகளுக்கு முன்பு வரை பாகிஸ்தான் அணியின் பலம் குறைவாகவே இருக்கும்.
தற்போது சிறந்த அணியை கட்டமைத்திருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு எதிராக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றிபெற முடியும். இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் வீரர்களின் ஃபார்மை கடந்து, வீரர்களின் தன்னம்பிக்கையும், மன உறுதியும் இருக்க வேண்டும். அதுதான் மாற்றத்தை உண்டாக்கும். அதேபோல் இந்தப் போட்டியை இன்னொரு போட்டி என்றே பார்க்கும் பக்குவம் இருக்க வேண்டும். அதிக பில்டப்பை மனதில் ஏற்றிக் கொண்டால், வித்தியாசமான ஏதாவது முயற்சிப்போம்.
ஆனால் இதுபோன்ற அதிக அழுத்தங்கள் நிறைந்த போட்டிகளில் நாம் வழக்கமாக செய்வதை செய்தாலே போதுமானது. ஏனென்றால் இரு அணிகளின் வீரர்களுமே சிறந்தவர்கள். அதனால் இதுபோன்ற போட்டிகளில் அழுத்தமின்றி நிதானமாக இருக்கும் வீரர்களால் தான் சிறப்பாக விளையாட முடியும். அதேபோல் இதுபோன்ற போட்டிகளின் போது 6 மாதங்கள் சரியாக விளையாடவில்லை என்றாலும் பரவாயில்லை என்று, மனஉறுதி அதிகமுள்ள வீரர்களை களமிறக்க வேண்டும்.
ஏனென்றால் சரியான நேரத்தில் ஆடக் கூடிய வீரர்களால் தான் வெற்றியை கொடுக்க முடியும். அதேபோல் இந்திய அணி வீரர்கள் மட்டுமல்லாமல் டாப் ஆர்டர் வீரர்கள் அனைவருமே பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாமை பின் தொடர வேண்டும். ஒருநாள் போட்டிகளில் அதிக பந்துகளை எதிர்கொண்டால் தான் பெரிய ஸ்கோரை எட்ட முடியும். பாபர் அசாம் அதனை தொடர்ந்து செய்கிறார். டாப் 3 பேட்ஸ்மேன்களில் ஒருவர் சதம் விளாசினாலே, எளிதாக 300 ரன்களை கடந்துவிடலாம் என்று தெரிவித்துள்ளார்.