மும்பை: நியூசிலாந்து முன்னாள் தலைமை பயிற்சியளார் மைக் ஹெசன் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் ரவி சாஸ்திரியின் பதவி காலம் விரைவில் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய பயிற்சியாளரை நியமிக்கும் நடவடிக்கைகளில் பிசிசிஐ நிர்வாகம் களம் இறங்கி இருக்கிறது.

தகுதி உடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் பிசிசிஐ ஏற்கனவே அறிவித்து உள்ளது. இந்திய அணியில் தலைமை பயிற்சியாளர் உட்பட மற்ற பயிற்சியாளர்களுக்கான பதவிகளுக்கு ஜூலை 30 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டு மென்பதையும் பிசிசிஐ தெளிவாக சுட்டிக்காட்டி உள்ளது. இந் நிலையில் யாரும் எதிர்பாராத திருப்பமாக, இந்திய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசன் விண்ணப்பிக்க முடிவெடுத்துள்ளார்.
இவர் 6 ஆண்டுகளாக நியூசிலாந்து தலைமை பயிற்சியளாராக இருந்தவர். 2018ம் ஆண்டு பதவியிலிருந்து விலகினார். அவரது பயிற்சி காலத்தின் தான் நியூசிலாந்து அணி 2015ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையில் பைனல் சென்றது.
மைக் ஹெசன் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் பஞ்சாப் அணிக்கு பயிற்சியாளராக இருக்கிறார். தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிசிசிஐ அறிவித்த தகுதி மைக் ஹெசனுக்கு உள்ளதால் விரைவில் அவர் விண்ணப்பிக்க உள்ளதாகவும், அவ்வாறு விண்ணப்பித்தால் நிச்சயம் பயற்சியாளராக நியமிக்கப்படுவார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.