மும்பை: 2016 ரியோ ஒலிம்பிக்ஸ் மற்றும் 2021 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆகிய இரு தொடர்களிலும் இந்தியாவின் கொடியை உயரப் பறக்க வைத்தவர் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து. வெள்ளி, வெண்கலம் என்று இரு பதக்கங்களை வென்ற பிவி சிந்து, இந்தியாவுக்காக 2 ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்தவர்.
இம்முறை ஹாட்ரிக் பதக்கத்தை வெல்லும் கனவுடன் பிவி சிந்து களமிறங்கியுள்ளார். முதல் சுற்றில் மாலத்தீவு வீராங்கனையை எளிதாக வீழ்த்திய பிவி சிந்து, 2வது சுற்றில் எஸ்டோனியாவைச் சேர்ந்த கிறிஸ்டின் கூபாவை எதிர்கொள்ளவுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு காயங்களை சந்தித்த பிவி சிந்து, முக்கிய போட்டிகளில் சொதப்பி வந்தார்.

இந்த நிலையில் கடினமான காயம் குறித்து பிவி சிந்துவின் தந்தை பிவி ரமணா மைகேல் தளத்திற்கு பிரத்யேகமாக அளித்த பேட்டியில், அடுத்தடுத்து காயத்தை சந்திக்கும் போது ஒரு விளையாட்டு வீரர் ஃபார்முக்கு வருவது எளிதான விஷயமல்ல. சரியாக 2022 காமன்வெல்த் போட்டிகளுக்கு பின் பிவி சிந்துவின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அந்த காயத்திற்கு சிகிச்சை எடுத்து கொண்டு மீண்டு வந்த போது, 2023ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி முட்டியில் காயம் ஏற்பட்டது.
காயமடைந்த தேதியை கூட என்னால் மறக்க முடியாது. ஆனால் ஓராண்டுக்குள் ஒலிம்பிக் தொடருக்கு பிவி சிந்து தயாராகியதற்கு கடின உழைப்பும், குடும்பத்தினரின் ஆதரவும், ரசிகர்களின் நம்பிக்கையும் தான் காரணம். பிப்ரவரி மாதத்திலேயே முழு ஃபிட்னஸை எட்டி, பயிற்சியை தொடங்கிவிட்டார். பிவி சிந்து பயிற்சியை அவரின் பயிற்சியாளர் பிரகாஷ் படுகோனே, பேட்மிண்டன் அமைப்பு உள்ளிட்டோர் சிறப்பாக திட்டமிட்டனர்.
ஒலிம்பிக் தொடரை பொறுத்தவரை ஏராளமான சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். நிச்சயம் பிவி சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான பாதை கடினமாகவே இருக்கிறது. ஆனால் மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார் என்று நம்பிக்கை உள்ளது. பேட்மிண்டன் போன்ற விளையாட்டில் அன்றைய நாளில் சிறப்பாக விளையாடுபவர்களே வெற்றிபெறுவார்கள். அதேபோல் பிரகாஷ் படுகோனே சார் தாமாக முன்வந்து சிந்துவுக்கு பயிற்சியளிக்கிறேன் என்று கூறினார்.
இந்தியாவுக்காக மீண்டும் ஒரு பதக்கம் வெல்ல வேண்டும் என்று பிரகாஷ் படுகோனே ஆர்வமாக உள்ளார். அவரின் ஆர்வத்தை மனதில் வைத்து சிந்துவும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். ஜூலை 4 முதல் ஜூலை 22 வரை ஜெர்மனியில் தான் இருவரும் கடைசி கட்ட பயிற்சியை மேற்கொண்டனர். அவருக்கு நாங்கள் நிச்சயம் நன்றிக் கடன்பட்டுள்ளோம். பேட்மிண்டன் விளையாட்டு மனது மட்டுமல்லாமல் உடல் தொடர்புடையதும் தான். நாம் தொடர்ச்சியாக வெற்றிபெறும் போது மக்கள் அனைவரும் கொண்டாடுவார்கள்.
ஆனால் வயது அதிகரித்து ஒரு விளையாட்டு வீரர் தோல்விகளை சந்திக்கும் போது, விமர்சிக்க தொடங்குவார்கள். கடந்த கால சம்பவங்கள் பிவி சிந்துவின் மனநிலையை நிச்சயம் பாதித்துள்ளது. இம்முறை சவாலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறார். அவர் யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய தேவையில்லை. இந்தியாவுக்காக தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்றுள்ளார். இம்முறை மீண்டும் இந்தியாவை பெருமை கொள்ள வைப்பார் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.