ஆசிய கோப்பையில் திணறிய தோனி
ஆசிய கோப்பையில் தோனி நான்கு போட்டிகளில் பேட்டிங் செய்தார். முதல் போட்டியில் ஹாங்காங் அணியிடம் டக் அவுட் ஆகி ஏமாற்றினார். அடுத்து வங்கதேச அணிக்கு எதிராக 37 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். அடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து, நடுவரின் தவறான தீர்ப்பால் வெளியேறினார். அடுத்து, இறுதிப் போட்டியில் 67 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஏமாற்றினார். முக்கியமாக, இறுதிப் போட்டியில் அவர் விக்கெட்கள் விழாமல் காக்க வேண்டிய வேலையே செய்தாலும், அநியாயத்திற்கு 53 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியது பலத்த அதிர்ச்சி அளித்தது. அந்த போட்டியில் இந்தியா கடைசி பந்தில் தான் வெற்றி பெற்றது.
நான்காம் இடம்
தோனி, தான் கேப்டனாக இருந்த போது ஐந்து அல்லது ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்து வந்தார். அது தவறு, அவர் மூன்று, அல்லது நான்காம் இடத்தில் இறங்க வேண்டும் என கங்குலி உள்ளிட்ட பலர் கூறியும் அவர் அதை மாற்றிக் கொள்ளவில்லை. தற்போது கேப்டன் பதவியில் தோனி இல்லாத நிலையில் நான்காம் இடத்தில் இறங்க துவங்கியுள்ளார் தோனி. அப்படி இருந்தும் அவரால் ரன் குவிக்க முடியவில்லை என்பது அவருக்கு மேலும் அழுத்தத்தை கொடுத்துள்ளது.
அதிரடி ஆட்டக்காரர் இல்லை
இந்த நிலையில் தான் சஞ்சய் மஞ்ச்ரேகர், "இனிமேல் தோனியிடம் அதிக எதிர்பார்ப்பை குறைத்துக் கொள்ளுங்கள். இப்போதுள்ள நிலையில் அவர் உலகின் சிறந்த அதிரடி ஆட்டக்காரர் இல்லை" என கூறியுள்ளார். அதே போல, தோனி, கேதார் ஜாதவுக்கு முன் களம் இறங்கியது தவறு என இறுதிப் போட்டி குறித்து கூறியுள்ளார். போட்டியை வெற்றியோடு முடிப்பதில் சிறந்த வீரர் என பெயர் பெற்ற தோனி, இனிமேல் அப்படி ஜெயித்துக் கொடுப்பார் என நினைக்காதீர்கள் என மறைமுகமாக கூறியுள்ளார் மஞ்ச்ரேகர்.
உலகக்கோப்பையில் தோனி
எனினும், 2019 உலகக்கோப்பையில் தோனி ஆட வேண்டும் என கூறியுள்ளார். தோனி மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் என்பதோடு அவரது அனுபவம், கோலிக்கு தேவை என்பதால், தோனி நிச்சயம் இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.