டெல்லி: இந்த ஐபிஎல் போட்டிகளில் தோனி, வாட்சன், பிராவோ ஆகியோரின் இதுவரையிலான ஆட்டம் வெறும் டிரெய்லர்தான். இனிமேதான் அவர்களுடைய ஆட்டம் துவங்க உள்ளது என்று கோச் ஸ்டீபன் பிளெம்மிங் கூறுகிறார்.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் இன்று நடக்கும் 33வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதுவரை 8 ஆட்டங்களில் 6ல் வென்று 12 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே முதலிடத்தில் உள்ளது. கொல்கக்தா அணி 8ல் 4 வெற்றியுடன் 8 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.
சிஎஸ்கே அணி இதுவரை விளையாடிய ஆட்டங்களில் கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி, ஷேன் வாட்ன், பிராவோ, போன்ற வயதில் சீனியர் வீரர்களே அதிரடி ஆட்டத்தில் கலக்கி வருகின்றனர். பேட்டிங்கில் தோனி 286 ரன்களும், ஷேன் வாட்சன் 281 ரன்கள், பிராவோ 118 ரன்கள் எடுத்துள்ளனர். இதில் ஷேன் வாட்சன் மற்றும் கேப்டன் தோனியின் அதிரடி ஆட்டங்கள் எதிரணிகளை மிரள வைத்துள்ளன. இவர்களைத் தவிர சுரேஷ் ரெய்னா 205 ரன்கள், அம்பதி ராயுடு 370 ரன்கள் குவித்துள்ளனர்.
மிகவும் வயதானவர்கள் அணி என்று பேசப்பட்டு வந்த சிஎஸ்கேவில் தோனி உள்ளிட்டோரின் ஆட்டமே அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
வயது ஒரு பொருட்டே கிடையாது. தோனி, வாட்சன், பிராவோ ஆகியோர் இதை தங்களுடைய ஆட்டங்களில் வெளிப்படுத்தியுள்ளனர். இதுவரை நடந்த ஆட்டங்களில் அவர்கள் ஆடியது எல்லாம் வெறும் டிரெய்லர்தான். இனி அடுத்தடுத்த ஆட்டங்களில் அவர்களிடம் இருந்து இன்னும் அதிரடியான ஆட்டத்தை
எதிர்பார்க்கலாம் என்று சிஎஸ்கே கோச் ஸ்டீபன் பிளெம்மிங் கூறியுள்ளார்.
இவர்களுடைய அனுபவங்களே, அணியின் பலமாகும். அதுவே மற்ற வீரர்களுக்கு மிகச் சிறந்த ஊக்கமாக அமைந்துள்ளது என்று பிளெம்மிங் கூறியுள்ளார். இதுவரை விசில் அடிக்கத் தெரியாதவர்கள் உடனடியாக கற்றுக் கொள்ளுங்கள். பிளே-ஆப் சுற்றுக்கு முன், சிஎஸ்கே இன்னும் 6 ஆட்டங்களில் விளையாட உள்ளது.