லண்டன்: சமகால கிரிக்கெட்டின் ஃபேப் 4 பட்டியலில் இங்கிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான் ஸ்டூவர்ட் பிராட் தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், இந்திய தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், இங்கிலாந்து அணியின் இளம் நட்சத்திர வீரர் ஹாரி ப்ரூக் மற்றும் நியூசிலாந்து இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா ஆகிய 4 பேரையும் தேர்வு செய்திருக்கிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஃபேப் 4 என்ற பதம் மிகவும் பிரசித்தி பெற்றது. மறைந்த நியூசிலாந்து ஜாம்பவான் மார்டின் கிரோவ் முதல்முறையாக ஃபேப் 4 என்ற வார்த்தையை அடையாளப்படுத்தினார். 2014ஆம் ஆண்டு விராட் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய 4 நாடுகளை சேர்ந்த 4 வீரர்களை ஃபேப் 4 என்று கூறினார். இதனால் இவர்கள் 4 பேருக்கும் இடையில் சரிசமமான போட்டியும் ஏற்பட்டது.

ரசிகர்களிடையே புதிய விவாதமும் நடைபெற்று வந்தது. தற்போது இந்த 4 வீரர்களும் கொஞ்சம் கொஞ்சமாக ஓய்வை அறிவித்து வருவதால், அடுத்த தலைமுறைக்கான ஃபேப் 4 வீரர்கள் யார் என்ற விவாதம் தொடங்கி இருக்கிறது. இதுதொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான் ஸ்டூவர்ட் பிராட் புதிய விவாதம் ஒன்றை தொடங்கி வைத்துள்ளார்.
அதில் பிராட் பேசுகையில், என்னை பொறுத்தவரை ஃபேப் 4 என்ற தலைப்பில் பேசினால், சுப்மன் கில் இல்லாமல் அந்த பட்டியல் முடிவடையக் கூடாது. அதேபோல் இந்திய அணியின் நட்சத்திர வீரரான ஜெய்ஸ்வாலிடம் அதிக திறமை இருக்கிறது. அவரால் போட்டியை மிக வேகமாக எதிரணியிடம் இருந்து பறித்துவிட முடிகிறது. அதேபோல் தென்னாப்பிரிக்கா அணியில் ட்ரே ப்ரிடோரியஸ் சிறப்பாக ஆடி வருகிறார்.
கிரேம் ஸ்மித்தின் இளமைக் காலத்தை அவர் நினைவுப்படுத்துகிறார். அதேபோல் டிவால்ட் பிரெவிஸ் சிறப்பாக ஆடி வருகிறார். ஹாரி ப்ரூக் பெயரும் இடம்பெற வேண்டும் என்று நினைக்கிறேன். நியூசிலாந்து அணியில் இருந்து பார்த்தால், ரச்சின் ரவீந்திரா சிறந்த திறமையுடன் இருக்கிறார். அதனால் ஃபேப் 4 என்ற வகைப்படுத்தினால், ஹாரி ப்ரூக், ரச்சின் ரவீந்திரா, சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகிய 4 பேரையும் தேர்வு செய்வேன் என்றார்.
ஸ்டூவர்ட் பிராட்டின் இந்த கருத்தை ஜோஸ் பட்லரும் ஆமோதித்துள்ளார். ஆனால் இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியா அணியின் கேமரூன் க்ரீன் சேர்க்கப்படாதது பேசுபொருளாகி இருக்கிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக கேமரூன் க்ரீன் காயம் காரணமாக விலகி இருந்தாலும், இந்த ஆஷஸ் தொடரில் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.