சென்னை : ஐபிஎல் காய்ச்சல் ரசிகர்களுக்கு தற்போது தான் குணமடைந்த நிலையில் அடுத்தது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. ஐபிஎல் தொடரில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆர்சிபி என மூன்று அணிகளும் சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை.
இதற்கு மாறாக கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு முன்பாக மெகா ஏலம் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு அணிகளும் மூன்று வீரர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

இரண்டு வீரர்களை ரைட் டு மேட்ச் கார்ட் மூலம் தேர்வு செய்யலாம். இதனால் ஒட்டுமொத்தமாக புதிய அணியையே ஒவ்வொரு அணியும் உருவாக்கும். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அதானி குழுமம் வாங்க இருப்பதாக சமூக வலைத்தளத்தில் செய்திகள் வெளியானது. இதன் மூலம் சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தற்போது இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் சிஎஸ்கே அணியை நிர்வகிக்கிறது. இந்த நிலையில் வேறு நிறுவனம் சிஎஸ்கே அணியை வாங்கினால் அதன் பெயர் மாற்றப்படுமா நிர்வாகம் மாறினால் ஒட்டுமொத்தமாக வீரர்களும் மாறுவார்களா என்ற சந்தேகம் இருந்தது. இப்படி நடந்தால் இனி ஐபிஎல் போட்டியை தாங்கள் பார்க்க மாட்டோம் என்று பல ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் இது உண்மையா பொய்யா என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்பது வருமானத்தை கொடுக்கும் ஒரு அணியாகும். இதன் மூலம் கோடிகளில் இந்தியா சிமெண்ட்ஸ் புரள்கிறது. வருமானத்தில் இருக்கும் ஒரு அணியை வெற்றிகரமாக இயங்கும் ஒரு அணியை எந்த நிறுவனமும் விற்க முன்வராது.
அதுமட்டுமல்லாமல் அதானிக் குழுமம் சிஎஸ்கே அணியை வாங்க முன் வந்திருப்பதாக எந்த அதிகாரப்பூர்வ செய்திகளும் வெளியாகவில்லை.
ஒரு வேலை அப்படி நடந்தால் கூட சிஎஸ்கே விடமிருந்து சில பங்குகளை மட்டும் தான் வாங்க முன் வரலாம். இதனால் இது பொய் செய்தி. இதனை ரசிகர்கள் நம்பி கவலைப்பட வேண்டாம்.