துபாய்: 2025 ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில், இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவும், வங்கதேச அணியின் தற்காலிக கேப்டன் ஜாக்கர் அலியும் டாஸின்போது கைகுலுக்கிக் கொள்ளவில்லை என்று பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். டாஸ் முடிந்த பிறகு இரு கேப்டன்களும் உடனடியாக விலகிச் செல்வது போன்ற அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, ஒரு புதிய சர்ச்சையை உருவாக்கியது. இதன் மூலம் இரண்டு அணி ரசிகர்களுக்கு இடையே சிண்டு முடிய பார்த்தார் அந்த பத்திரிக்கையாளர்.
ஆனால், இந்த வீடியோ உண்மையின் ஒரு பகுதியை மட்டுமே காட்டுகிறது. உண்மையை மறைத்து, ஒரு தவறான பிம்பத்தை உருவாக்கும் நோக்கில் இந்த வீடியோ வெட்டப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. உண்மையில், டாஸ் முடிந்த பிறகு, வங்கதேச கேப்டன் ஜாக்கர் அலி தனது அணியின் மாற்றங்கள் குறித்தும், பந்துவீச்சைத் தேர்வு செய்வது குறித்தும் பேசிய பிறகு, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவுடன் 'பிஸ்ட் பம்ப்' (fist pump) செய்து கொண்டார். அதன்பிறகே சூர்யகுமார் யாதவ் பேசினார். வைரல் வீடியோவில் காட்டப்படும் காட்சிக்குப் பிறகுதான் இந்த 'பிஸ்ட் பம்ப்' நிகழ்ந்துள்ளது.

முன்னதாக, பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. ஏப்ரல் மாதம் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், 'ஆபரேஷன் சிந்தூர்'க்குப் பிறகு நமது ராணுவ வீரர்களைக் கவுரவிக்கும் வகையிலும் இந்தியா இந்த முடிவை எடுத்திருந்தது.
இதை பாகிஸ்தான் விமர்சித்ததுடன், ஐசிசியிடம் அதிகாரப்பூர்வப் புகார் அளித்தும் அது நிராகரிக்கப்பட்டது. இந்தச் சூழலில், இந்தியா - வங்கதேசம் இடையேயும் இதேபோன்ற ஒரு சம்பவத்தை சித்தரிக்க முயன்றே, இந்தத் தவறான வீடியோ பரப்பப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் தவறான தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, போட்டி முடிந்த பிறகு இந்தியா மற்றும் வங்கதேச வீரர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொண்டு, சகஜமாகப் பேசிக்கொண்டனர். எனவே, டாஸின்போது இரு கேப்டன்களும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை என்று பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானது. இதன் மூலம் பாகிஸ்தான் ஊடகத்தினர் சிலர் இந்திய அணி மீது தங்கள் வன்மத்தை வெளிப்படுத்த காத்திருப்பது தெரிகிறது.
வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும், சூப்பர் 4 சுற்றில் தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கான இடத்தை உறுதி செய்து உள்ளது.