மும்பை: இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீரை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்குவதற்காக மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி வேண்டுமென்றே இந்திய அணி தோல்வி அடையும் வகையில் மோசமாக விளையாடியதாக குறிப்பிட்ட பிரிவு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பரப்பி வருகின்றனர். அது உண்மையா? அப்படி நடக்க சாத்தியம் உள்ளதா? என்பது பற்றி பார்க்கலாம்.
கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பின் இந்திய அணி இரண்டு மோசமான வரலாற்று தோல்விகளை சந்தித்து இருக்கிறது. முதலில் இலங்கையில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் தொடரில் இந்திய அணி ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்து இருந்தது. மூன்று போட்டிகள் கொண்ட இலங்கை ஒருநாள் தொடரில் மூன்றிலும் தோல்வி அடைந்தது இந்திய அணி.

இலங்கையில் பல ஆண்டுகளாக இந்திய அணி ஒருநாள் தொடரில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த நிலையில், ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற முன்னணி வீரர்கள் அடங்கிய இந்திய அணி இலங்கையில் தோல்வி அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அந்த தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா பெரிதாக ரன் குவிக்கவில்லை.
அடுத்து இந்திய மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி 0 - 3 என்ற கணக்கில் தொடரை இழந்து இருக்கிறது. இந்த தொடரில் ஆறு இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்த ரோஹித் சர்மா 91 ரன்களும், விராட் கோலி 93 ரன்களும் மட்டுமே எடுத்து இருக்கின்றனர்.
நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் மிக மோசமான செயல்பாட்டை அவர்கள் வெளிப்படுத்தி இருப்பது கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. அதே சமயம் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வந்ததில் இருந்து தான் இந்திய அணி சரியாக விளையாடவில்லை என்ற விமர்சனமும் எழுந்து இருக்கிறது.
இந்த நிலையில், கவுதம் கம்பீருக்கு ஆதரவாக ரசிகர்கள் சிலர் சமூக வலைதளங்களில், "கவுதம் கம்பீரை பதவியில் இருந்து நீக்குவதற்கான சதிதான் இது. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி வேண்டுமென்றே சரியாக ரன் குவிக்கவில்லை." என கூறி வருகின்றனர். இது பொதுவான ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் விஷயமாக உள்ளது. இது சாத்தியமா?
சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணிக்காக விளையாடி வரும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இதுபோன்ற தரக்குறைவான செயல்களில் ஈடுபடுவார்களா? என்பதை கூட சிந்திக்காமல் சில விஷமிகள் அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றனர். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் தங்கள் கேரியரின் கடைசி கட்டத்தில் உள்ளனர்.
ரோஹித் சர்மா இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளிலும், விராட் கோலி 2 அல்லது மூன்று ஆண்டுகளிலும் ஓய்வு பெற வேண்டிய நிலையில் உள்ளனர். இந்த சூழலில் அவர்கள் சரியாக ஆடவில்லை என்றால் அவர்களை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற விமர்சனம் எழும். இப்போது அப்படியான குரல்கள் எழுந்து உள்ளன. ரோஹித் மற்றும் கோலி இதை எல்லாம் அறியாதவர்கள் அல்ல.
"இந்தியாவின் தோல்வி, கம்பீருக்கு எதிரான சதி" என்ற கருத்தை பரப்பி வருபவர்கள் யார்? கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படும் முன்பு 5 ஆண்டு காலம் பாரதிய ஜனதா கட்சியின் எம்பி ஆக இருந்தார். அவருக்கு என ஆதரவாளர்கள் உள்ளனர். கம்பீர் பதவிக்கு பாதிப்பு வரக்கூடாது என அவரது ஆதரவாளர்கள் தான் சமூக வலைதளங்களில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி மீது அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றனர் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.