டெல்லி: 2025 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு அணி மாற உள்ளதாக சில நாட்களாக செய்திகள் வெளியாகி வந்தன. அது குறித்து சமூக வலைதளத்தில் சிலர் தவறான தகவலை பரப்பி வந்தனர். குறிப்பாக ரிஷப் பண்ட் இந்திய அணிக்குள் அரசியல் செய்கிறார் என விராட் கோலி கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதைக் கண்டு ரிஷப் பண்ட் கொந்தளித்து இருக்கிறார்.
ஏன் இப்படி பொய்யான செய்திகளை பரப்புகிறீர்கள்? என அவர் தன் வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார். 2025 ஐபிஎல் தொடருக்கு முன் மெகா ஏலம் நடைபெற உள்ளது. மெகா ஏலத்திற்கு முன்னதாக ஐந்து வீரர்களை மட்டுமே ஒவ்வொரு அணியும் தக்க வைக்க முடியும் என கூறப்படுகிறது. அதனால், ஐந்து முக்கிய வீரர்களை தவிர்த்து ஒவ்வொரு அணியும் புதிதாக ஒரு அணியை கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

அதனால், சில அணிகள் தங்கள் கேப்டன்களையும் மாற்றும் முடிவில் உள்ளன. இந்த நிலையில் ரிஷப் பண்ட் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்து விலகி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு செல்வார் என ஒரு தகவல் சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வந்தது. ரசிகர் ஒருவர் ரிஷப் பண்ட் மீது அபாண்டமான குற்றச்சாட்டு ஒன்றை வைத்து இருந்தார்.
அந்த ரசிகர் வெளியிட்டு இருந்த பதிவில், ரிஷப் பண்ட் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை தனது மேலாளர் மூலமாக தொடர்பு கொண்டதாகவும், தனக்கு கேப்டன் பதவி அளிக்கப்படுமா? என கேட்டதாகவும், அதற்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மறுத்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார். மேலும், இந்திய அணியிலும் டெல்லி கேபிடல்ஸ் அணியிலும் ரிஷப் பண்ட் அரசியலில் ஈடுபட்டு தனது இடத்தை தக்க வைத்துக் கொள்வதால், அவரை ஆர்சிபி அணிக்குள் அனுமதிக்க வேண்டாம் என விராட் கோலி அணி நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த செய்தி பொய்யானது என்பதை பலரும் புரிந்து கொண்டனர். எனினும், இது போன்ற அபாண்டமான குற்றச்சாட்டை கண்டு கோபம் அடைந்து இருக்கிறார் ரிஷப் பண்ட். இதற்கு பதிலடி கொடுத்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். "இது பொய்யான செய்தி. ஏன் சமூக வலைத்தளங்களில் இது போன்ற பொய்யான செய்திகளை பரப்புகிறீர்கள்? கொஞ்சமாவது பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள். நம்பிக்கையற்ற சூழ்நிலையை எந்த காரணமும் இன்றி உருவாக்காதீர்கள். இது முதல் முறையும் அல்ல, இது கடைசி முறையும் அல்ல."
"உங்களுக்கு சொல்லப்படும் செய்திகள் சரியானதுதானா? என மீண்டும் ஒரு முறை சரி பார்த்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் இது மோசமாகிக் கொண்டே செல்கிறது. அதன் பின் உங்கள் விருப்பம். இது இந்த செய்தியை பரப்பிய ஒருவருக்கான பதில் மட்டும் அல்ல. பொய் செய்திகளை பரப்பும் அனைவருக்குமானது." இவ்வாறு ரிஷப் பண்ட் அதற்கு பதில் அளித்துள்ளார்.
2025 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் டெல்லி கேபிடல்ஸ் அணியில் கேப்டனாக தொடர்வார் என கூறப்படுகிறது. அவர் சமீபத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் உரிமையாளரை நேரில் சந்தித்தார். அதன் பின் ரிஷப் பண்ட் கேப்டனாக தொடர்வது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் சமீபத்தில் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.